

காளான் சமோசா
தேவை:
மைதா மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப வெங்காயம் - 1
காளான் - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கைப்பிடி எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் காளான், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
காளான் வெந்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு கொத்தமல்லி தூவி இறக்கி ஆறவைக்க வேண்டும். பின்பு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வட்டமாக தேய்த்து கொள்ளவும். பின் வட்டமாக தேய்த்த மாவில் பாதியை வெட்டி கூம்பாக செய்து அதனுள் காளான் கலவையை வைத்து மூடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான காளான் சமோசா தயார்.
பிரெட் சமோசா
தேவை:
பிரெட் துண்டுகள் - 10
மைதா மாவு - 150 கிராம்
உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1
பீன்ஸ் - 10
கேரட், வெங்காயம் - தலா 2
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
இஞ்சித் துருவல் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரெட்டை பொடித்துக் கொள்ள வேண்டும். பின்பு மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் உரிக்கவும். பின்னர் வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் பின்பு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கி பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
இதனோடு பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.பிறகு பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவேண்டும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும். அசத்தலான சுவையில் பிரட் சமோசா தயார்.
பசலைக்கீரை சமோசா
தேவை:
மைதா - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
பசலைக்கீரை - 2 கட்டு
நெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
மைதாமாவில் சிறிதளவு எண்ணைய், உப்பு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு வெண்ணெயை உருக்கி, வேகவைத்த பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள், மிளகாய்தூள் சேர;த்து தண்ணீர் வற்றும்வரை வதக்கவும். இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை, சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, சின்ன அப்பள அளவிற்கு தேய்த்து அதில், வதக்கி வைத்துள்ள பசலைக்கீரை வைத்து மூடி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், ஜோரான சுவையில் பசலைக்கீரை சமோசா ரெடி.
பனீர் சமோசா
தேவை:
மைதா மாவு - 1 கப்
உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
பனீர் - 50 கிராம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
சாட் மசாலா - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய், சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு கெட்டியாக பிசைந்து, அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பின்பு மற்றொரு பாத்திரத்தில் பனீரை துருவி, அதன் மேல் உப்பு, சாட் மசாலா, மிளகாய் தூள் தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
மேலும் பிசைந்து வைத்துள்ள மைதாமாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரியாகத் தேய்த்து, மத்தியில் கலந்த சிறிது பனீர் மசாலாவை வைத்து, சமோசா வடிவத்தில் மடக்கியதும் அதன் ஓரங்களில் உள்ள மாவை அழுத்தி வைத்துகொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,மாவில் செய்து வைத்துள்ள சமோசாவை எடுத்து கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறினால் மொறுமொறுப்பான பனீர் சமோசா தயார்.