

ரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து கலந்து அதனுடன் சிறிதளவு சாதத்தை மிக்சியில் குழைவாக அரைத்து கலந்த மாவுடன் கலந்து செய்தால் ரவா தோசை மொறுமொறுப்பாக முறுகல் தோசை மாதிரி அருமையாக இருக்கும்.
தோசை மாவு அரைக்கும்போது சிறிது ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் தோசை மெல்லியதாகவும், மொறுமொறுப்பாகவும் சுவையில்அசத்தும்.
முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலைவேண்டாம். அதை மிக்சியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, நறுக்கிய, பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் ருசியாகவும் தோசை முறுகலாகவும் இருக்கும்.
தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து போனால் அதை மிக்ஸியில் அரைத்து அதில் தேவையான உப்பு, கருவேப்பிலை சேர்த்து தோசையை வார்த்தால் பட்டு போல மென்மையாகவும், ருசியாகவும் முறுகலாகவும் இருக்கும்.
ரவா தோசைக்கு அரிசி மாவு ரவை இரண்டும் சமஅளவில் அத்துடன் ஒரு மேஜை கரண்டி கடலைமாவு அல்லது வறுத்து அரைத்த உளுந்தம் பருப்பு மாவை கலந்து தோசை சுட்டால் தோசை மொறுமொறுவென தனிச்சுவையுடன் இருக்கும்.
தோசைக்கு மாவு ஆட்டும்போது அரிசிமாவுடன் ஒரு கைப்பிடி அளவு அவலையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். மறுநாள் காலை தோசை வார்த்து எடுத்தால் முறுகலாகவும், ருசியாகவும் இருக்கும். வீட்டில் உள்ள அனைவரின் முகத்திலும் முறுவல் (முறுகல்) சிரிப்புதான்.
காலையில் அரைத்ததோசை மாவை உடனே தோசை வார்க்க வேண்டுமா? கொஞ்சம் மோர் அல்லது புளித்த மோர் சேர்த்து அவை இல்லாத பட்சத்தில் பழைய சாதத்தின் நீரை விட்டு தோசை சுட்டுப்பாருங்கள்.
மறுநாள் வார்க்கும் தோசையைவிட பிரமாதமாக இருக்கும். இனி சாதம் வடித்த கஞ்சி நீரை கொட்டவே மாட்டீர்கள்.
2 டம்ளர் பச்சரிசி + அரை டம்ளர் அவல் விகிதத்தில் 2 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுத்து சிறிது புளித்த மோர் சேர்த்து கலந்து கனமாக வார்த்தெடுத்தால் பைசா உளுந்து செலவில்லாமல் அருமையான ஊத்தப்பம் தயார். முதல் நாள் அரைத்து எடுத்தால் மோர் கூட வேண்டியதில்லை.
சில நான் ஸ்டிக் தோசைக்கல் சிலவற்றில் முதல் தோசை போல் மற்ற தோசைகள் மொறு மொறுவென வருவதில்லை என சில பெண்களின் குறைபாடு. அதற்கு காரணம் கம்பெனிக்கு கம்பெனி கல் வித்தியாசப் படுவதும், கல் அதிக சூடாகிவிடுவதுமாகும். எனவே தோசை வார்க்கும் முன் கல் அதிக சூடாகத் தெரிந்தால் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டோ அல்லது தோசை கல்லை கீழே இறக்கி வைத்துவிட்டோ மறுபடியும் தோசை வார்க்க சூடு மட்டுப்பட்டு தோசை ஒன்றுபோல் நன்றாக வரும்.
விதவிதமாக தக்காளி அரைத்து தோசை, புதினா, கொத்தமல்லி, வெங்காய தோசை என சுட்டு சாப்பிடுங்கள்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here