
கோதுமை ரவை தயிர்வடை
தேவை:
சம்பா கோதுமை ரவை - 2 கப்
கெட்டித் தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
மல்லித்தழை - சிறிது
செய்முறை:
உப்பு, பச்சை மிளகாயை அரைத்து தயிரில் கலக்கவும். அதில் இஞ்சி துருவல், மல்லித்தழை சேர்க்கவும். பிறகு கோதுமை ரவையை போட்டு கெட்டியாக பிசையவும். அரைமணி நேரம் கழித்து, கலவையை வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொறுத்து எடுக்கவும். சுவையான இந்த வடையை சுலபமாக விரைவில் செய்து விடலாம்.
உளுந்து தயிர் பக்கோடா
தேவை:
உளுந்தம் பருப்பு - 2 கப்
பச்சரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
மல்லித்தழை - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
உளுந்தம் பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, கெட்டியாக அரைக்கவும். அதில் பச்சரிசி மாவு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தழை, சீரகத்தூள் கலந்து, தயிர் விட்டுப் பிசைந்து, பக்கோடாக்களாக உருட்டி, காய்ந்த எண்ணெயல் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மொறுமொறுப்பான பக்கோடா தயார்.
கோடைக்கேற்ற பச்சடி டிப்ஸ்
கோடை காலத்தில் சமையலில் தயிர் பச்சடி சேர்த்துக் கொண்டால், உடல் உஷ்ணம் குறையும். தாகமும் தீரும். சுவையாகவும் இருக்கும்.
பத்து விதமான பச்சடி டிப்ஸ்:
* வெள்ளரி, கேரட் வெங்காயம் இவற்றில் தயிர் பச்சடி செய்தால், பச்சையாகவே சேர்க்க வேண்டும்.
* வெண்டைக்காயில் தயிர் பச்சடி செய்யும்போது, வெண்டைக்காயை சிறிது எண்ணெயில் வதக்கி விட்டு, தயிரில் கலக்க வேண்டும்.
* பரங்கிக்காய், பூசணிக்காய் போன்றவற்றை வேக வைத்து, தயிரில் கலக்கவேண்டும்.
* தயிர் பச்சடி தயாரித்ததும் உப்பு போட்டால் சீக்கிரம் நீர்த்து விடும். அதனால் பரிமாறும்போது உப்பு சேர்த்தால் போதும்.
* காய்கறி பச்சடி செய்யும்போது நீர் கூடிவிட்டால், சில பிரெட் துண்டுகளை வறுத்து அதில் போட்டால், அதிகப் படியான நீரை அவை உறிஞ்சிவிடும். சுவையும் கூடும்.
* தயிர் பச்சடிக்கு புளிக்காத தயிரையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.
* தயிர் பச்சடிக்கு பச்சை மிளகாய்க்கு பதிலாக இஞ்சி சேர்த்தால் அல்சர் பிரச்னை வராது. சுவையும், மணமும் கூடும்.
* கேரட், வெள்ளரி போன்றவற்றை துருவி, எலுமிச்சை சாறு கலந்தும் பச்சடி செய்யலாம்.
* பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில், வெங்காய பச்சடியை தவிர்த்து, வெள்ளரி, கேரட் பச்சடி சாப்பிட்டு சென்றால், மற்றவருடன் பேசும்போது வாயிலிருந்து பச்சை வெங்காய வாடை வருவதைத் தவிர்க்கலாம்.
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு டிபன் பாக்ஸில் தயிர் சாதத்திற்கு பதிலாக, தயிர் பச்சடியை சாதத்தில் பிசைந்து கொடுத்து அனுப்பினால் விரும்பி சாப்பிடுவர்.