"பிரியாணி வகைகள் தெரியும். புலாவ் வகைகளில் விதவிதமாக செய்யத் தெரியுமா?" என்றெல்லாம் நம் வீடுகளில் கேட்டு நம்மை கலாய்ப்பார்கள். 'எனக்கெல்லாம் பழத்தில் கூட புலாவ் செய்ய தெரியும்" என்று பெருமையுடன் சொல்லிவிட்டு இந்த ஆரஞ்சு பழத்தில் மணக்க மணக்க புலவு செய்து கொடுத்துப் பாருங்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் குவிவது நிச்சயம்.
குறிப்பாக சாத்துக்குடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளதால் சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கவும் உதவுவதுடன் எலும்புகளுக்கு வலுவூட்டி, வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
ஜீரண சக்தியை மேம்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் சாத்துக்குடியை ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.
உடல் நலனுக்கு மட்டுமல்ல நாவின் புதுமையான சுவைக்கும் ஏற்றதாக இருக்கிறது இந்த ஆரஞ்சு பழ புலாவ். இதன் செய்முறை காண்போம்.
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 1 கப்
ஆரஞ்சு பழம் (சாத்துக்குடி )- 3
வெங்காயம்- 2
பச்சை மிளகாய் - 5
நெய் - கால் கப்
தேங்காய் சிறியது- 1 (துருவி பால் எடுத்தது)
உப்பு - தேவையான அளவு முந்திரிப்பருப்பு -5
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி -ஒரு சிறிய துண்டு
லவங்கம் பட்டை -தலா4
சோம்பு -சிறிது
கொத்தமல்லி, புதினா -ஒரு கைப்பிடி
ஆரஞ்சு கலர் பொடி - 2/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது.
செய்முறை:
முதலில் ஒன்றரை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதிப் பழங்களை உழித்து சுளைகளை தோல் நீக்கி தனியாக எடுத்து வைக்கவும். மற்ற பிரியாணிகள் செய்வது போலவே வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இலவங்கம், பட்டை, சோம்பு போட்டுப் பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வணக்கி இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வாசம் வரும் வரை தாளித்து அரைத்த முந்திரி விழுதை சேர்க்கவும். எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் இரண்டு பங்குக்கு பதில் பழச்சாற்றை அளந்து அந்த அளவு பாலை குறைத்து முதலில் பால் மட்டும் (பழச்சாறு ஒரு கப் இருந்தால் தேங்காய் பால் 3 கப்) ஊற்றவும்.
30 நிமிடங்கள் ஊறவைத்த அரிசியை அதனுடன் நன்கு கலந்து தேவையான உப்பு கலர் சேர்த்து வேக விடவும் .அரிசி முக்கால் பதம் வெந்ததும் பழச்சாற்றை ஊற்றி நன்றாக வெந்ததும் தாம்பாளத்தில் பரவலாகக் கொட்டி உழித்து வைத்திருக்கும் ஆரஞ்சு பழங்கள் கலந்து கூடவே பொடியாக நறுக்கிய புதிரை கொத்தமல்லித்தழை தூவி சூடாக பரிமாறினால் ஆரஞ்சு மணத்துடன் சுவையைத் தரும் ஆரஞ்சு புலாவ்.
தேவையெனில் கொட்டையில்லாத திராட்சை கிடைத்தாலும் இதில் கலந்தால் காணக் கலர்புல்லாக இருக்கும்.