சில வகை உணவுகளை மற்றொரு உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பார்கள். ஆனால் சில உணவுகளை தனித்து சாப்பிடுவதை விட மற்றொரு உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்கிறார்கள் உணவியல் ஆய்வு வல்லுநர்கள். அப்படிப்பட்ட உணவுகளில் சில...
அரிசி உணவு சத்தான உணவுதான் ஆனால் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு புரதச்சத்து மிக முக்கியம், சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறவர்கள் உடலில் புரதத்தின் அளவை அதிகரிக்க அரிசி உணவுடன் பீன்ஸ் அல்லது பருப்பு உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
அடர் பச்சை நிற கீரைகளை சமைக்கும் போது அதிலுள்ள அதிகப்படியான இரும்புச்சத்தை உடல் கிரகிக்க சிரமப்படும். எனவே கீரைகளை சமைக்கும் போது அதனுடன் தக்காளி சேர்த்து சமைக்கும் போது அதிலுள்ள வைட்டமின் சி சத்து நமது உடல் இரும்புச்சத்தை எளிதாக கிரகிக்க உதவுகிறது என்கிறார்கள். இதேபோல் ஆலிவ் ஆயிலில் காரேட்டினாயிட் மற்றும் நல்ல கொழுப்பும் இருந்த போதிலும் அதனுடன் தக்காளி தோலிலுள்ள லைக்கோபின் எனும் சத்து டன் சேரும்போது தான் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
பாலில் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும், தசை வளர்ச்சிக்கும் தேவையான கால்சியம் அதிகமுள்ளது. ஆனால் அது உடலில் சரியாக கிரகிக்கப்படுவதில்லை. பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இக்குறைபாடு சரி செய்யப்படுகிறது என்கிறார்கள். அதே போல பாலுடன் சேர்த்து பேரீச்சம் பழம் சாப்பிட்டால் அது சதை வளர்ச்சிக்கும், திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது என்கிறார்கள்.
மீன் உணவுகளை சமைக்கும்போது அதனுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைக்கும் போது உடலில் ஆன்டி -இன்பிளமேட்ரி பண்பு அதிகரிக்கிறது என்கிறார்கள். மீனும், வெள்ளைப்பூண்டும் கொழுப்பு சத்து உணவுகள்தான். ஆனால் இவை இரண்டும் சேரும் போது உடலில் நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட கொழுப்பு குறைகிறது என்கிறார்கள்.
ஆப்பிளுடன் கருப்பு சாக்லேட் சேர்த்து சாப்பிடுவது இருதய நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு என்கிறார்கள். இந்த உணவு சேர்க்கை இருதய இரத்தக் குழாய்களை தடித்து போகாமல் பார்த்துக் கொள்கிறதாம் ஆப்பிள் தோலில் உள்ள பிளோவினாயிட்ஸ் மற்றும் குவார்செட்டின் சாக்லேட்டில் உள்ள கோகோ உடன் இணைந்து இருதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை உடைத்தெறிய உதவுகிறது என்கிறார்கள்.
மஞ்சளிலுள்ள 'குர்குமின்' எனும் சத்து சிறந்த ஆன்டி -இன்பிளமேட்ரியாக செயல்படும் ஆற்றல் உடையது, இதனுடன் கருப்பு மிளகு சேரும்போது தான். அது உடலில் எளிதில் கிரகிக்கப்படுகிறது இல்லை என்றால் நமது உடல் அதை கொஞ்சமாகத்தான் கிரகித்துக் கொள்கிறது என்கிறார்கள். எனவே மஞ்சளுடன் மிளகு சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது என்கிறார்கள்.
எலும்புகளின் நலம் காக்க உதவும் கால்சியம் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது உடலில் 50 சதவீதம் தான் சேர்கிறது. காரணம் வைட்டமின் டி பற்றாக்குறை. கால்சியம் சத்து அதிகமுள்ள புரோக்கோலி போன்ற காய்கறிகள் சமைக்கும் போது வைட்டமின் டி சத்து அதிகமுள்ள முட்டை சேர்த்து சமைத்து சாப்பிடும் போது இந்த குறைபாடு தீர்க்கப்படுகிறது என்கிறார்கள். முட்டை ஆம்லெட்டில் புரோக்கோலி துருவல் தூவி சாப்பிடலாம். அதேபோல் ஆம்லெட்டில் சீஸ் போட்டு சாப்பிடலாம்
கிரீன் டீ யுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிரீன் டீயின் கசப்பு தெரியாமல் இருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது என்கிறார்கள் காரணம் இரண்டிலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. அதனால் இரண்டின் நோய் எதிர்ப்பாற்றல் இணைந்து பல்வேறு வகையான நோய்கள் வராமல் தடுக்கும் என்கிறார்கள்.
ஓட்ஸ் கஞ்சி அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை சேர விடாது, இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கும். ஆனால் ஓட்ஸை எடுத்துக்கொள்ளும் போது தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.