

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால், வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்.
1. எந்த நிலையிலும் வாழ்வின் கடைசி பகுதியில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள் (சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்).
2. பேரக் குழந்தைகளின் மேல் எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.
3. விலகியே இருங்கள். உறவுகள் இனிமையாகத் தான் இருக்கும். என் பிள்ளை என் பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியாக இருங்கள்.
4. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. கையில் பணம் இல்லாவிட்டால், பிள்ளைகளிடம் மதிப்பும், மரியாதையும், உரிமையும் நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் சுய சம்பாத்திய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிர வேண்டாம். முழுவதும் பகிர்ந்தால், நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.
5. காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை திரும்பத் திரும்ப சொல்லி காட்ட வேண்டாம். நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள். அவ்வளவே.
6. கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள். தேவைப்பட்டால், வருடம் ஒருமுறை பரிசுப் பொருட்களுடன் சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இருந்து வாருங்கள். அங்கே அதிகம் தங்க வேண்டாம்.
7. எந்த நேரத்திலும் மருமகள் முன் மனைவியை /கணவனை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள். இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுக்கத் தவறாதீர்கள். பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.
8. பிள்ளைகளின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானப்பட வேண்டாம். அவர்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை. நவீன கார்பரேட் வாழ்க்கை. 1000 ரூபாயை பெரிதாக நினைத்தவர்கள் நீங்கள். அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள்.
9. அதிக பாசம், ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். அறிவுரைகளை தவிர்து விடுங்கள்!
10. உங்களை விட அறிவிலும், திறமையிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது, முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் உங்களால் பிழைக்க முடியும். நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் நீங்கள் தற்குறிகளே என்பதை நினைவில் கொண்டு வாழ்ப் பழகுங்கள். குறைக்காலத்தை நிம்மதியாக கழித்து வாழுங்கள்..