

அறுபது வயதைக் கடந்தவர்கள் மனதாலும் உடலாலும் சற்று பலமிழந்தவர்களாக மாறிவிடுவார்கள். இது இயற்கையான ஒன்றுதான். பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 60 என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இதற்குப் பின்னால் நம் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்ற மனநிலை தோன்றிவிடும். ஆனால், இது தவறான எண்ணம் என்பதை 60 வயதைக் கடந்தவர்கள் உணர வேண்டும். அறுபது வயதானவர்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சில விஷயங்களைப் பின்பற்றியாக வேண்டும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொவோம்.
* முதலில் நமக்கு அறுபது வயதாகிவிட்டதே. இனி வாழ்வில் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். அறுபது வயதைக் கடந்த பின்னர் அபாரமான சாதனைகளைச் செய்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.
* கூடுமானவரை மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி போன்ற வாகனங்களை நெரிசல் மிகுந்த சாலைகளிலும் ஹைவேஸ்களிலும் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே ஓட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் மாலை ஆறு மணிக்கு மேல் வாகனத்தை ஓட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
* வீட்டில் ஃபேன்களைத் துடைத்தல், டியூப் லைட்டுகளைத் துடைத்தல் என ஸ்டூல் மீது ஏறி நின்று செய்யக்கூடிய வேலைகளை செய்யவே செய்யாதீர்கள். இப்படிச் செய்து கை கால்களை உடைத்துக் கொண்டவர்கள் ஏராளம்.
* மொபைல் போனில் பணத்தை அனுப்புவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டு கூடுமானவரை பணத்தை நேரிடையாகக் கையாளாமல் ஆன்லைன் மூலமாகக் கையாளப் பழகுங்கள். இதன் மூலம் பணத்தைத் தொலைத்தல் ஏமாறுதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
* ஏடிஎம்மிற்குச் சென்று பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உடன் உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை உடன் அழைத்துச் செல்லுங்கள். இன்றைய காலகட்டத்தில் தனியே பணமெடுக்கச் சென்று பணத்தைப் பறிகொடுப்பவர்கள் ஏராளம் என்பதை நாம் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொள்ளுகிறோம்.
* தங்க நகைகளை அணிவதைத் தவிர்த்து விடுங்கள். விலை அதிகமுள்ள தங்க நகைகளை யாரிடமாவது இழந்து மன வருத்தம் அடைவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
* உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது, எத்தனை வீடுகள் உள்ளன, மாதாமாதம் எவ்வளவு தொகை வருகிறது என்பதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இதனால் பல ஆபத்துகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
* அறுபது வயதுக்குப் பின்னர் யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்தைப் (Surety Signature) போடவே போடாதீர்கள். அப்படிப் போட்டு சம்பந்தப்பட்டவர் பணத்தைச் செலுத்தவில்லை என்றால் நீங்கள் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டி வரும். இதனால் உங்கள் குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிம்மதியை இழக்க வேண்டி வரும்.
* யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறுவதைத் தவிர்த்து விடுங்கள். தற்காலத்தில் அறிவுரைகளை யாரும் விரும்புவதில்லை. இதனால் நீங்கள் சில உறவுகளையும் நட்புகளையும் இழக்க வேண்டிவரும்.
* கழிவறைகளில் கவனமாக, மெதுவாக நடக்கப் பழகுங்கள். பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து அதனால் பெரும் பிரச்னைகளைச் சந்தித்தவர்கள் ஏராளம். எனவே, அவசரப்படாமல் நிதானமாக நடக்கப் பழகுங்கள்.
60 வயதுக்கு மேல் மேற்காணும் பத்து விஷயங்களை அவசியம் கடைபிடியுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.