தினசரி வாழ்வின் பிரச்னைகளைத் தீர்க்க உதவும் 5 எளிய வழிகள்!

திட்டமிடல்
திட்டமிடல்https://tamil.goodreturns.in
Published on

வாழ்வில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தினால் அனைவருக்கும் வாழ்வு எளிதாகும். நமது பெரும்பான்மையான பிரச்னைகளைத் தீர்க்கும் ஐந்து எளிய வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

முதல் நாள் இரவு திட்டமிடுதல்: ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து அன்றைய நாளுக்கான வேலைகளைத் திட்டமிடுவது பெரும்பான்மையோரின் வழக்கம். ஆனால், இந்தத் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்ய வேண்டும். முதல் நாள் இரவே மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிடாமல் படுக்கைக்குப் போகும்போது தூக்கம் வராமல் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்த மன அழுத்தத்தில் ஈடுபட தவிர்க்க நேரிடும். அதனால், மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை பத்து நிமிடம் செலவழித்து ஒரு பட்டியலிட்டுக் கொண்டால் நிம்மதியாகத் தூக்கம் வரும். காலையில் எழுந்ததும் அதை செயல்படுத்த ஆரம்பிக்கலாம். விஷயங்கள் மிகவும் எளிதாக நடக்கும்.

தள்ளிப்போடாதீர்கள்: எளிய சில வேலைகளை பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடுவது பலரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், தள்ளிப்போடுவதால் அவற்றை செய்ய முடியாமல் போய் விடும். உதாரணமாக பழைய பேப்பர்களை ஒழுங்காக எடுத்துக் கட்டி வைப்பது, பில்களை எடுத்து அடுக்கி வைப்பது, மேஜையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை உடனே செய்யாமல் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. அதற்கு பதிலாக ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் செலவழித்து அந்த வேலைகளை உடனே செய்துவிட்டால் பணிகள் உடனே எளிதாக முடியும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய ஒழுங்கீனங்களைத் தடுக்கிறது. மனதிற்கும் அமைதியை தருகிறது.

20 நிமிட ஆரோக்கியம்: எத்தனை வேலைகள் இருந்தாலும் தினமும் காலையில் 20 நிமிடங்கள் ஒதுக்கி நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்வது மிகவும் அவசியம். இது மனதை அமைதிப்படுத்தும். உடலுக்கு உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரும். அன்றைய நாளுக்கான சக்தியை உடலுக்கும் மனதுக்கும் தரும். தினமும் இதைப் பயிற்சி செய்யும்பொழுது அது ஒரு நல்ல பழக்கமாக மாறும்.

80 / 20 விதியை பயன்படுத்துவது: எனக்குப் பிடித்ததை செய்ய எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்று புலம்புவது பலரின் வழக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் நேரத்தை ஒழுங்காக கட்டமைக்காததுதான். ஒவ்வொரு நாளையும் 80/20 ஆக பிரித்துக்கொள்ள வேண்டும். பெரிய இலக்குகள் பணிகளுக்கு 80 சதவீதம் ஒதுக்கிவிட்டு மீதி 20 சதவீதத்தை தனக்காக ஒதுக்கிகொள்ள வேண்டும். இது வாழ்க்கை மற்றும் உற்பத்தித் திறனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு அரிசி போதும்; உடலில் உள்ள பிரச்னைகளுக்கு குட் பை சொல்லிடுங்க!
திட்டமிடல்

அந்த 20 சதவிகித நேரத்தில் பிடித்த வேலைகளைச் செய்யலாம். புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இசைக்கருவிகளை வாசிப்பது, ஓவியம் வரைவது, நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, விளையாடுவது போன்ற பிடித்த பொழுதுபோக்குகளில் நேரம் செலவழிக்க வேண்டும். 80 சதவீத வேலைகளை செய்வதற்கான உத்வேகத்தை இந்த 20 சதவீத நேரம் செலவிடுதல் தரும். தனக்கான நேரத்தை ஒதுக்குவது விலைமதிப்பற்றது ஆகும்.

போதுமான ஓய்வு: நாள் முழுக்க வேலை செய்துகொண்டே இருப்பதும் சிந்திப்பதும் ஒருவரை மிக விரைவில் களைப்படைய செய்து விடும். போதுமான ஓய்வு ஒவ்வொருவருக்கும் அவசியம். ஓய்வான மனமும் உடலும் வலிமையான ஒன்றாகும். மனதை அமைதியாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, செய்யும் வேலைகளை கவனத்துடனும் சிறப்பாகவும் செய்ய ஓய்வு முக்கியமாகும்.

இந்த ஐந்து பழக்க வழக்கங்களை தினமும் கடைப்பிடித்தால் பிரச்னைகளில் இருந்து எளிதாக மீண்டு வர ஒருவரால் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com