
படிப்பை முடித்து, பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்குள்ளும் காதல் உணர்வு வருவது இயற்கை. அப்போது அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒரு மாற்றம் தெரியும். அந்நிலையில் ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்த்ததும் பிடித்துப்போய், அவளைக் காதலிக்க வேண்டும், கல்யாணமும் பண்ணிக்கணும் என்று உறுதியாய் இருக்கும்போது அவனிடம் தோன்றும் ஏழு அறிகுறிகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளையே மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாயிருக்கும்போது, அவளுக்கு தினசரி போனில் மெசேஜ் அல்லது கால் பண்ணி தொடர்பில் இருக்கும் பழக்கத்தை எந்த சூழ்நிலையிலும் தவறவிட மாட்டான். மேலும், அவனது நேரம், பணம், அன்பு ஆகியவற்றை செலவு பண்ணி அவளை நேரில் பார்க்கும்படியான சந்தர்ப்பத்திற்காக ஆவலுடன் காத்திருப்பான்.
2. அவன், அந்தப் பெண் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பதைக் காணவே விரும்புவான். அதற்காக, அவளுடன் இருக்கும்போது, அவளைப் புகழ்ந்து பேசவும், ஆச்சர்யப்படும் விதமான பரிசுப் பொருளைக் கொடுத்து அசத்தவும், தன் சக்திக்கு மீறி செலவு செய்யவும் தயங்க மாட்டான். வார இறுதியில் அவள் திருப்தியடையும் விதமான இடங்களுக்கு அழைத்துச் சென்று, பிடித்தமான உணவுப் பொருள்கள் என வாங்கிக் கொடுத்து அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதையே தனது இலட்சியமாகக் கொண்டிருப்பான்.
3. அவளின் அன்பைப் பெறுவதற்காக சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு, அவன் செய்த சிறு சிறு தவறுகள், விளையாட்டுத்தனமான செயல்கள், பலவீனம் போன்ற அனைத்தையும் அவளிடம் கொட்டித் தீர்த்து விடுவான். இது அவள் அவனது, வெளிப்படையான இன்னொரு முகத்தையும் தெரிந்து கொண்டு அவனுடன் ஒத்த மனதுடன் இணைந்திருக்க அவளைத் தயார்படுத்த கையாளும் உத்தி எனவும் கூறலாம்.
4. அவன் விரும்பும் அப்பெண்ணின் விருப்பு, வெறுப்புகள், அவள் அவனுடன் பகிர்ந்து கொண்ட பழைய கதைகள், அவளுக்கு டீ எந்த அளவு சூடு இருக்க வேண்டும் என்பது உள்பட அனைத்து விஷயங்களையும் மனதுக்குள் நினைவில் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவான். அவளுக்குப் பிடித்த கலர், பாட்டு, ரெஸ்டாரன்ட், பெர்ப்யூம் போன்றவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்வான்.
5. அவள் அவனுடைய மனைவியாகப் போகிறவள் என்பதை மிகவும் பெருமையுடன் மற்றவர்களுக்கும் தெரிவிக்க விரும்புவான். அவனை ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறி அப்பெண்ணிடம் தோன்றும்போது, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைக்க விரும்புவான். தனது பெற்றோர், தாத்தா, பாட்டி, நெருங்கிய நண்பர்கள் போன்ற அனைவரும் முழு மனதுடன் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தால் அவன், அவள் மீது பொறுப்பும் அக்கறையும் எடுத்துக்கொண்டு மேலும் அதிகமான அன்பு செலுத்த ஆரம்பிப்பான்.
6. அன்பு அதிகமாகும்போது அப்பெண்ணின் மீது அதிக நம்பிக்கை வைத்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய கருத்துக்களைக் கேட்டு நடக்கத் தவற மாட்டான். அவளுக்குப் பிடித்த உணவு, சினிமா போன்றவற்றையே இவனும் விரும்புவான். மொத்தத்தில் முழுவதுமாக அவள் உலகத்திற்குள் இணைந்து கொள்ளத் தயாராயிருப்பான்.
7. அப்பெண்ணின் சொந்த பந்தங்களுக்கும் அறிமுகமாகி, அவர்களை நேசிக்கவும், அவர்களால் நேசிக்கப்படவும் விரும்புவான். பெண்ணின் தோழிகளையும், பெற்றோரையும் சந்தித்து, தனது காதலி மீது அவனுக்கு எவ்வளவு அன்பும் அக்கறையும் உண்டு என்பதைக் காட்ட விரும்புவான்.
இந்த 7 அறிகுறிகளுடன் காதல் வயப்பட்டிருப்பவன் தனது காதலில் ஜெயிப்பது நிச்சயம்.