சிறு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போதும் மருந்து கொடுக்கும்போது குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிட சில எளிய யோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் உட்கார ஆரம்பிக்கும்போதே எல்லோருடனும் சேர்ந்து தட்டில் சாப்பிடச் சொன்னால் குழந்தைகள் எளிதில் சாப்பிடக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் தட்டை ஒரு சிறு பாயின் மீது வைத்து விட்டால் அது சிந்தும் சாதத்தை அப்படியே எடுத்து தட்டி விடலாம். தரையில் பட்டு அழுக்காகாமல் இருக்க இது ஒரு சிறந்த வழி. அதேபோல், நொறுக்குத் தீனியைத் தரத் துவங்கும்போது பழங்கள், பச்சைக் காய்கறிகளை ஸ்நாக்ஸ் ஆக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.
மாற்றத்தை குழந்தைகளும் விரும்புவார்கள். ஆதலால் பல்வேறு இயற்கையான வண்ணங்களில் விதவிதமாக சமைத்து, வித்தியாசமான பாத்திரங்களில் பரிமாறினால் தினமும் விருப்பமுடன் குழந்தைகள் சாப்பிட ஆசையுடன் அமர்வார்கள். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாகக் கழுவ கற்றுத்தர வேண்டும். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்கப் பழக்க வேண்டும்.
காலை டிபன், மதியம், இரவு உணவுகளை சரியான நேரத்திற்குக் கொடுத்து பழக்க வேண்டும். அப்போதுதான் அந்த நேரத்தில் தானாகவே அவர்களுக்குப் பசி எடுக்கும். அதிக அளவு சர்க்கரை பசியை மட்டுப்படுத்தும் என்பதால் பால் உணவில் சர்க்கரையை அதிகமாக சேர்த்து பழக்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. அதேபோல் சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளும் பசியை தடுத்து மந்தமாக்கி விடும் என்பதால் இதுபோன்ற விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.
சாப்பாடு ஊட்டுவதற்கு ஆரம்பிக்கும்பொழுது செல்போனை அவர்கள் கையில் கொடுத்து சிலர் சாப்பாடு ஊட்டுவதைப் பார்க்கலாம் .அதை முற்றிலும் தவிர்த்து, அன்பாக விளையாட்டு காட்டிக்கொண்டே கொடுத்தால்தான் ஆசையாக சாப்பிடுவார்கள். எனவே, பொறுமையோடு, திணிக்காமல் கொடுத்துப் பழக்க வேண்டும்.
மருந்து கொடுக்கும்பொழுது குழந்தைகளை அதட்டி மிரட்டி மருந்து தந்தால் புரையேறி மூச்சுத் திணறும். இந்த அவஸ்தையால் மறுபடியும் மருந்து சாப்பிட மறுத்து விடும். ஆதலால், எப்போதும் சிரித்த முகத்தோடு விளையாட்டு காட்டியபடி கொடுக்க வேண்டும். சில்வர் ஸ்பூனிலும் சங்கிலும் மருந்து கொடுத்தால் இவற்றின் முனை கூறாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாக்கில் ஐஸ் கட்டியை தேய்த்து விட்டு கசப்பு மருந்தை கொடுத்தால் குழந்தைகள் முரண்டு பிடிக்காமல் சாப்பிடுவார்கள். கைக்குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு தலை, மார்பு பகுதியை சற்று நிமிர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு மருந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு சில கப்களில் அவர்கள் விரும்பும் ஜுஸ் மற்றும் பானங்களை தந்து பழக்கினால் பிறகு அதே கப்பில் டானிக் கொடுத்து விடலாம். சில நேரம் குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது என்று ஒவ்வொரு சமயத்திலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் சாத்துக்குடி பழச்சாறு கொடுக்கலாம். குழந்தைகளின் வயிற்றுப்போக்குக்கு ஆப்பிள் பழம் நல்லது.
குழந்தை வளர்ப்பில் சாப்பாடும், மருந்து கொடுப்பதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவற்றை இதுபோல் சரிவர செய்து வந்தால் குழந்தை வளர்ப்பு சுலபமாக மாறிவிடும்.