
ஒரு சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது, தங்களுக்கு பழக்கமில்லாத இடம் எதுவாயினும் அதைப் பார்த்துப் பயப்படுவார்கள். இதுபோன்று, தன்னைச் சுற்றியுள்ள, அதே சமயம் பழக்கமில்லாத சூழ்நிலையைப் பார்த்து அச்சபடுவதற்கு அகோராஃபோபியா (Agoraphobia) என்று பெயர்.
இந்தப் பிரச்சனை, இதுவரை பழக்கமில்லாத, வசதியாக உணராத எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியாமல் பயந்து தவிப்பது, பாதுகாப்பற்றாதாக உணருவது, சிக்கிக்கொண்டது அல்லது உதவியில்லாமல் நிற்பது அல்லது சங்கடமாக உணருதல் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.
இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், திறந்த அல்லது மூடப்பட்ட இடங்களில் இருப்பது, வரிசையில் நிற்பது அல்லது கூட்டத்தில் இருப்பது போன்ற சூழ்நிலைகளை தங்கள் மனதிற்குள் இருக்கும் அச்சம் காரணமாக, எதிர்கொள்ளாமல் தவிர்க்க முற்படுவார்கள்.
மேலும், இவர்களுக்கு பொது இடங்களிலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், பழக்கமில்லாத இடங்களிலும் பாதுகாப்பாக உணரக் கடினமாக இருக்கும். வெளியில் செல்வதற்கு எப்போதும் ஒரு துணையைத் தேடுவார்கள்.
இவர்களுக்கு புதிய நபர்களைச் சந்திப்பதிலும், அவர்களுடன் உரையாடுவதில் பயம் அல்லது தயக்கம் இருக்கும். இதன் காரணமாக, இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள். ஆனால் இந்தத் தனிமை நாளடைவில் பெரிய மன அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைத்து வயதினரும் அகோராஃபோபியாவால் பாதிக்கப்படலாம். பொதுவாக 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதியினரை அதிகம் பாதிக்கிறது. சில சமயங்களில், குழந்தைகள் மற்றும் வயதானவர்களும் இதனால் பாதிக்கப்படலாம். குறிப்பாக, ஆண்களை விட பெண்களே அகோராஃபோபியாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலகளவில் 2% மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அகோராஃபோபியாவால் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கணிக்கப்படுகிறது. அதேசமயம், பெரும்பாலானோருக்கு இந்த நிலைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதால் அதை விட அதிகமான பாதிப்பு விகிதங்கள் இருக்கலாம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அகோராஃபோபியா ஏற்படுவதற்குச் சரியான காரணம் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், தன்னால் இதைச் செய்ய முடியாது, யாரிடமாவது ஏதாவது கேட்டால் தவறாக நினைத்து விடுவார்களோ, தன்னைப் பற்றிய மற்றவர்கள் சிந்தனை எப்படி இருக்குமோ, அதில் மாட்டிக்கொள்வோமோ, காப்பாற்ற துணைக்கு யாரும் இல்லையே போன்ற பயத்தினால் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பிரச்னையை சரி செய்ய உளவியல் ரீதியாக சிகிச்சை (மனநல மருத்துவர்களிடம் ஆலோசிப்பது), மருத்துவரின் பரிந்துரைப்படி, மருந்து எடுத்துக்கொள்வது மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் (பயத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் செய்வது) உதவி புரியலாம்.
அகோராபோபியா பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், முதலில் பயம் மற்றும் தேவையில்லாத சிந்தனைகளை தள்ளிவைப்பது நல்லது. இது தொடர்பாக மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர் போன்ற நிபுணர்களிடம் மனம் விட்டு பேசலாம். நேரில் சென்று பேச பயமாக இருந்தால், தொலைபேசி அல்லது வீடியோகாலில் கூடத் தொடர்பு கொண்டு பேசலாம்.