

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சிங்கிள் மதர் என்பது இயல்பான விஷயமாகி வருகிறது. கணவர் இல்லாமல், விவாகரத்து, இறப்பு அல்லது தனிப்பட்ட தேர்வினால் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும் பெண்கள் (சிங்கிள் மதர்) சமூக அழுத்தங்களையும், நிதி நெருக்கடிகளையும், வேலைபளு, சமூக அழுத்தம், தனிமை போன்ற சவால்களையும் எதிர்கொண்டாலும் குழந்தைகளை வெற்றிகரமாக வளர்த்து, குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர்.
பொறுப்பும் நேரமும்:
ஒற்றைத் தாயாக குழந்தை வளர்க்கும்போது நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். தனது வேலையையும் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலையை கவனிப்பதுடன் குழந்தைகளுக்கான நேரத்தையும் ஒதுக்கவேண்டும். வெற்றிகரமாக செயல்படுவதற்கு நேர மேலாண்மை என்பது மிகவும் அவசியம். தினசரி வேலைகள் வாராந்திர வேலைகள் மற்றும் மாதாந்திர வேலைகள் போன்றவற்றை பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் சரியாக முன்னிலைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். இப்படி திட்டமிட்டு செயல்படுவது மன அழுத்தமின்றி வைத்திருக்கும்.
நிதிச்சுமை:
வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் நிதிச் சுமை ஏற்படாமல் இருக்காது. விவாகரத்து அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுக்கு பின் குழந்தையின் பராமரிப்பு செலவு கிடைத்தாலும், வீட்டு செலவு, தனிப்பட்ட செலவு, குழந்தைகளின் கல்வி சுமை போன்றவற்றின் காரணமாக மன அழுத்தமும் நிதிச் சுமையும் ஏற்படும். இவற்றை பேலன்ஸ் செய்து வாழ்க்கையை ஓட்டுவதற்கு மனதிடமும், நம்பிக்கையும் அவசியம். உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை விட அத்தியாவசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம்.
குழந்தை வளர்ப்பு:
தந்தையாகவும் தாயாகவும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும், பாசத்தை வெளிப்படுத்தி அரவணைப்புடன் பிள்ளைகளை வளர்ப்பதும் அவசியம். குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டியதும் முக்கியம். முக்கியமாக குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டியது அவசியம்.தந்தை தன்னுடன் இல்லையே என்ற ஏக்கம் குழந்தைகளின் மனதில் இருந்தாலும் தாய் படும் கஷ்டத்தை பார்த்து வளரும் குழந்தைகள் சீக்கிரமே குடும்ப பாரத்தை சுமக்கவேண்டும் என்று நினைக்கும்.
மன அழுத்தம் மற்றும் சமூக அழுத்தம்:
சமூகம் மற்றும் உறவினர்களின் தேவையற்ற கேள்விகளும், புண்படுத்தும் எண்ணத்துடன் குடைச்சல் கொடுக்கும் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தவரை எதிர்கொள்ள தேவையான மன வலிமையும் அவசியம். வேலை மற்றும் குழந்தை வளர்ப்பு என அனைத்தையும் தனியாக நிர்வகிப்பதால் ஏற்படும் கடுமையான மன அழுத்தத்திலிருந்தும், சுய பச்சாதாபத்திலிருந்தும் வெளிவர வேண்டியது மிகவும் முக்கியம். தனிமை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு நண்பர்கள் அல்லது உறவினர்களின் வலுவான ஆதரவு அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் தனக்கென நேரம் ஒதுக்குவதும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம்.
உணர்ச்சி ரீதியான சவால்கள்:
தனிமை, குற்ற உணர்வு மற்றும் துணையற்ற நிலை போன்ற உணர்ச்சி ரீதியான சவால்களையும் சமாளிக்க வேண்டிய நிலையில், குழந்தைகளின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு நேர்மறையாக வளர்ப்பது, சுயபாதுகாப்பு போன்றவையும் அவசியம். தன்னைச் சுற்றி உள்ளவர்களின் தர்மசங்கடமான கேள்விகளையும், தேவையற்ற விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரியான உணர்ச்சி ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் பொழுது மனம் தளர்ந்து விடாமல் வலிமையுடன் இருக்கவேண்டும்.
யாரையும் எளிதில் நம்பவேண்டாம்:
சிங்கிள் மதராக வாழ்க்கையை தொடர்வதாக முடிவு எடுத்துவிட்டால், அதற்குப் பின்வரும் எல்லா நன்மை தீமைகளையும் ஒருவர் மட்டுமே கையாள வேண்டி இருக்கும். அதற்கு மனதளவில் முதலில் தயாராக வேண்டும். எல்லோரையும் சந்தேகப்பட வேண்டாம். ஆனால் அதே சமயம் யாரையும் எளிதில் நம்பி சொந்த விஷயங்களை பகிரவும் வேண்டாம். உங்களின் பலவீனம் பிறரின் பலமாக மாறினால் ஆபத்து அதிகம் உண்டு என்பதை உணரவேண்டும். அத்துடன் எந்த பிரச்னை வந்தாலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி சோர்ந்துவிடாமல் தீர்வு காண முயலவேண்டும்.
குடும்பம் என்ற அமைப்பு மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால் குடும்ப அமைப்பு சரியாக அமையாதவர்கள் அதை நினைத்து கலங்கிக் கொண்டிருக்காமல் பிள்ளைகளுக்காகவும் தனக்காகவும் தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டியது அவசியம்.