நம் வாழ்வில் பணம் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. அந்தப் பணத்தை சம்பாதிப்பதைக் காட்டிலும் சம்பாதித்த பணத்தை நிர்வகிப்பது என்பது இன்றைய சூழலில் பெரும்பாடாக உள்ளது.
விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் நபர்களா நீங்கள்? இதோ இது உங்களுக்காகத்தான்!
ஒரு பொருளை நாம் வாங்கும்பொழுது நம் மனதில் என்னென்ன எண்ணங்கள் வரும்? அந்த பைக்கை வாங்கியே ஆக வேண்டும், எவ்வளவு அழகாக இருக்கிறது, ரொம்ப காஸ்ட்லியா இருக்குமோ? இருந்தால் என்ன? அதற்குத்தான் EMI இருக்கிறதே. மாதம் மாதம் பணம் மட்டும் கட்டினால் போதும். வண்டி நம்முடையது. என்றெல்லாம் நம் மனதில் தோன்றும்.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னால் எத்தனை போராட்டங்கள்? இந்த மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க நீங்கள் உங்களையே கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள் உண்டு.
பயன்பாடு
ஒரு பொருளை வாங்கும்பொழுது முதல் கேள்வியாக இதுதான் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருட்கள் எந்த அளவுக்கு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
இந்தக் கேள்விக்கு, உடனே கடைக்குச் சென்று இந்த வண்டி எவ்வளவு, இது எவ்வளவு மைலேஜ் கொடுக்கும், புது ஃபியூச்சர் என்ன இருக்கிறது என்றெல்லாம் கேட்டு விடை தேடக்கூடாது.
உங்களுக்கு முதலில் இந்த வண்டி எதற்குத் தேவை? இதனால் நமக்கு என்ன லாபம் கிடைக்கும்? இந்த வண்டியில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? அவை நமக்கு ஏற்றவையாக இருக்குமா? இந்த வண்டி வாங்குவதால் மாதா மாதம் அதற்கான செலவு என்னவாக இருக்கும்? என்றெல்லாம் சிந்தித்துவிட்டு, பிறகு தேவை என்றால், கடைக்காரரிடம் சென்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டு வாங்கலாம்.
வசதிக்கேற்ற தேர்வு
சிலர் ஏதாவது ஒரு பொருளின் விலை சற்றுக் குறைவாக இருந்தால், அதன் தரமும் அவ்வளவு சரியாக இருக்காது என்று எண்ணி உயர்ந்த தரத்தில், அதிக விலையில் பொருளை வாங்க முயலுவார்கள்.
உதாரணமாக ஆண்ட்ராய்ட் ஃபோன்களும் ஐஃபோன்களும் இரண்டும் ஃபோன்கள்தான். இரண்டிலும் எல்லோரையும் அழைக்க முடியும். இரண்டிலும் போட்டோ, படம், சமூக வலைத்தளங்கள் என அனைத்தும் பயன்படுத்த முடியும். ஆனால், ஆண்ட்ராடை காட்டிலும் ஐஃபோனின் மதிப்பு அதிகம். ஆண்ட்ராய்டின் சேவைகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்கும். ஆனால் ஐஃபோன்களின் சேவைகள் ஒரு குறிப்பிட்ட ஃபோன் களுக்கு மட்டுமே இருக்கும். ஐஃபோன் என்பது கெளரவச் சின்னம் என்பதற்காக, மற்றவரைப் போல் தாமும் அதை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, பல ஆயிரம் ரூபாய்கள் அதிகமாக செலவு செய்து, ஆண்ட்ராய்டு ஃபோனுக்கு ‘நோ’ சொல்பவர்கள் எத்தனை பேர்? பொருட்களை வாங்குவதற்கு முன்பாக தங்களின் நிதி நிலைக்கு இது ஏற்றதா என்று ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து வாங்கினாலே பெரும்பாலானவர்கள் கடனிலிருந்து விடுபடலாம். நிம்மதியாக வாழலாம்.
இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டுவிட்டு பின்னர் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் வாங்குங்கள். நிச்சயம் உங்கள் பணம் சரியான முறையில் செலவிடப்படும்.