மாடி மேலே மாடி கட்டி...

மாடி மேலே மாடி கட்டி...

புதுமனை புகுவிழா அல்லது க்ருஹப்ரவேசம் என்பது நம்மில் பலரும் கலந்து கொள்வதுதான். வீடு கட்டி முடித்திருப்பவர்கள் முகத்தில் பெருமையும் சந்தோஷமும் குடிகொண்டிருக்கும். எத்தனையோ இடர்பாடுகள், லோன்கள், கஷ்டங்கள் மத்தியில் சவாலாக வீட்டை கட்டி முடித்து உறவினர்களையும் நண்பர்களையும் க்ருஹப்ரவேசத்திற்கு மகிழ்ச்சியுடன் அழைப்பு விடுவார்கள்.

ஆனால், பல பேர் அன்று தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது பேசி வீட்டுச் சொந்தக்காரரின் மனதை புண்படுத்தி விடுவார்கள். அந்த விமர்சனங்கள் என்னவென்று பார்ப்போமா?

“வீடு நல்லா டிஸைனாத்தான் கட்டியிருக்கீங்க. ஆனா கிச்சன் இங்கே இருக்கறதுக்குப் பதிலா அங்கே இருந்திருக்கலாமோ? ஆனாலும் பாத்ரூமும் கிச்சனும் எதிரும் புதிருமா இருக்கே?”

“இத்தனை சாதாரண டைல்ஸ் போட்டிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் பார்வையா போட்டிருக்கலாமே?”

“ஜன்னல் கம்பி, பால்கனி க்ரில் எல்லாம் ஹைதர் அலி காலத்து டிஸைனா இருக்கே. நாலு கடை ஏறி கேட்லாக் பாத்திருக்கலாமே?”

“வீடு பூரா வழவழன்னு மார்பிள் போட்டிருக்காப்ல? சின்ன குழந்தைங்க இருக்கற வீடு. ஓடியாடி விளையாடும்போது வழுக்கி விழந்தா ஃப்ராக்சர்தான்!”

“பெரிய பங்களா கட்டி பங்களாவாசியாக மாறிட்டீங்க. இனிமே எங்க மாதிரி இருக்கறவங்க கூட வெல்லாம் பழைய மாதிரி இருப்பீங்களோ என்னவோ?”

“ஏண்டியம்மா, வாஸ்து ப்ரகாரம் கட்டியிருக்கியோன்னோ, என் பொண்ணு டில்லியிலே இருந்தாலும் வாஸ்து ப்ரகாரம் நல்லா கட்டியிருக்கா. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப்படாது பாரு?”

“ஹப்பா! விளம்பரத்துல காமிக்கறாப் போல குழாய் வாஷ் பேசின் எல்லாம் இருக்கு. ம்ஹம்! நாங்க இன்னமும் பித்தளை குழாயை வச்சுண்டே மாரடிக்கிறோம்!”

“எல்லா கதவுமே கார்விங்கா? என்ன திடீரென்று லாட்டரி, கீட்டரி அடிச்சுடுத்தா?”

“வீடு மாத்ரம் பங்களாவா கட்டிருக்கீங்க. ஆனா சாப்பாடு கொஞ்சம் சுமார்தான்.”

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பல இன்னல்களுக்கு மத்தியில், (ஃப்ளாட்டை புக் பண்ணி டயத்துக்கு தராமல் இழுக்கடிக்கும் பில்டர், வாங்கின கடனுக்கு வட்டி கட்டி, பிளான் ப்ரகாரம் இல்லாமல் வேறு விதமாக கட்டி... இப்படி) வீடு கட்டியிருப்பவர்களை நாம் மனப்பூர்வமாக பாராட்டி வாழ்த்துவதே முறை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com