

ஆண்டு இறுதித் தேர்வுகள் நெருங்கி வருகின்றன. மாணவர்கள் பெரு முயற்சி எடுத்து படிப்பதில் ஆர்வம் காட்டி படித்துக் கொண்டிருப்பர். அந்த வகையில் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற பெற்றோர்கள் செய்ய வேண்டியது குறித்து இப்பதிவில் காண்போம்.
விளையாட விட்டு விடுங்கள்
குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும் என்ற தவிப்பு காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை தங்கள் பாசக்கயிற்றால் கட்டி வைக்க முற்படுகின்றனர். காலையிலிருந்து இரவு வரை டியூசன், பள்ளிக்கூடம், படிப்பு என்று ஓடி ஓடி களைத்து போயிருக்கும் குழந்தைகள் சிறிது நேரம் விளையாடச் சென்றால் அவர்களை வற்புறுத்தி விளையாட விடாமல் வீட்டிற்கு அழைத்து வந்து' படி படி' என நச்சரிக்க கூடாது.
"படி படி "என பாடமாய் படிக்கக்கூடாது
குழந்தைகள் யாரிடமாவது மனம் விட்டு எப்போதாவது பேசிக்கொண்டிருந்தால், "உடனே அங்கே என்ன அரட்டை வந்து படி" என அதட்டக்கூடாது. படி, படி என்ற குரலைக் கேட்டு குழந்தைகள் ஒரு வகையான எரிச்சலுக்கு உள்ளாகி அவர்களுக்கு மன இறுக்கத்தை கொடுக்கும் என்பதால் பெற்றோர்கள் இந்த செய்கையை தவிர்க்க வேண்டும்.
தவறு தப்பாக மாறிவிடும்
சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தை ஏதாவது தப்பு செய்கிறதா? என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் படி,படி என சொல்லிக்கொண்டே இருந்தால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவர்களை உங்கள் கண் பார்வையில் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வதன் மூலம் ஒரு வகையான பய உணர்ச்சியையும் எச்சரிக்கையையும் குழந்தைகளுக்கு கொடுக்கும். தப்பு செய்ய பயமும் வரும்.
நீ புத்திசாலி! சாதிப்பாய்
தங்கள் குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும் அவனுடைய நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீட்டு பையன்கள் உறவுக்கார குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவார்கள். பெரும்பாலும் தங்கள் குழந்தையை காட்டிலும் அதிக திறமை உள்ளவர்களுடைய ஒப்பீடு இருக்கும் மதிப்பெண்ணும் அப்படித்தான்.
இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள் உன் நண்பனை விட 25 மார்க் தானே குறைவு .பரவாயில்லை இது ஒரு பெரிய வித்தியாசம் கிடையாது. நடந்து முடிந்த தேர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் இறுதித்தேர்வுக்கு இன்னும் சிறப்பாக உன்னை தயார் செய்து திறமையை காட்டு .நீ புத்திசாலி எனக் கூறினால் குழந்தை தன்னம்பிக்கையோடு சாதித்து காட்ட முயற்சியில் இறங்கும்.
பெற்றோருக்கும் டிவி மொபைல் 'நோ'
பிள்ளைகள் தனி அறையில் படித்தாலும் வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருந்தால், கவனம் சிதறும் என்பதால் குழந்தைகளின் தேர்வு முடிகிற வரை பெரியவர்களும் டிவி பார்க்காமல் இருப்பதோடு, கேபிள் இணைப்பை துண்டித்து விடுவது நல்லது. மேலும் செல்பேசி குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கும் என்பதால் தேர்வு முடிகிற வரை வாங்கி வைப்பதோடு அவசியமான நேரங்களில் செல்பேசியை குழந்தைகள் பயன் படுத்தினால் அவற்றை கண்காணிப்பது சிறந்தது.
சத்தான உணவுகள்
கண்விழித்து படிக்கும் குழந்தைகளின் உடல்நலம் கெடாமல் இருக்க பால், மோர், தயிர் நிறைய கொடுப்பதோடு பழரசங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தூங்காமல் இருப்பதற்காக சூடாக தேநீர் கொடுப்பது, முட்டை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்கவேண்டும். வயிற்றுக்கோளாறு ஏற்படும் என்பதால் முடிந்தவரை அசைவங்களை தவிர்த்து குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதர நிலையை தெரிவிக்கவேண்டும்
வீட்டின் பொருளாதார சிக்கலை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். கல்வி கற்று உயர் படிப்பை படிக்க வேண்டிய அத்தியாவசியத்தை ஒவ்வொரு பெற்றோரும் விரிவாகவும் அழுத்தமாகவும் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
மேற்கூறியவற்றை பெற்றோர்கள் செய்வதால் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதிப்பர் என்பதில் ஐயம் எதுவுமில்லை.