வீட்டை அழகாக வைத்துக்கொள்ள ஆன்லைன் மற்றும் கடைகளில் விற்கும் விலையுயர்ந்த அலங்கார பொருட்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கிக் குவிப்போம். ஆனால், எந்த செலவும் இல்லாமல் குப்பையில் வீசப்படும் ஒரு சாதாரண பொருளை வைத்து நமது வீட்டை ஒரு மினி அரண்மனை போல மாற்ற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.
ஆம், சமையல் அறையில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அந்த தேங்காய் சிரட்டை மூலம் பல ஆச்சரியமூட்டும் கைவினைப் பொருட்களை நாம் மிக எளிதாக உருவாக்கலாம். உங்கள் வீட்டில் நீங்கள் விடுமுறை நாட்களில் போர் அடித்து அமர்ந்திருக்கும் நேரங்களில் இந்த அட்டகாசமான ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்கள்.
தொங்கும் செடிகள் மற்றும் பூந்தொட்டிகள்!
பொதுவாக வீடுகளில் அதிக விலைகொடுத்து வாங்கிய பிளாஸ்டிக் அல்லது மண் தொட்டிகளை செடி வளர்க்க பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக இந்த ஓடுகளை அழகாக சுத்தம் செய்து, அவற்றில் சிறிய துளைகளை இட்டு உறுதியான கயிறு மூலம் கட்டிக்கொள்ளலாம்.
இந்த சிறிய தொட்டிகளில் காற்றில் வளரும் செடிகள் அல்லது இன்டோர் பிளாண்ட்ஸ் வளர்த்து வீட்டின் பால்கனியில் அல்லது ஜன்னல் ஓரங்களில் தொங்கவிட்டால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். உங்கள் கற்பனைக்கு ஏற்ப அக்ரிலிக் வர்ணங்களை தீட்டி இவற்றை மேலும் அழகுபடுத்தலாம்.
பறவைகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் குவளை!
வெயில் காலம் வந்துவிட்டால் சிறிய பறவைகள் தண்ணீர் இன்றி மிகவும் தவிக்கும். அந்த நேரத்தில் இந்த கழிவுப் பொருட்களை ஒரு பறவை உணவூட்டியாக நம்மால் மிக எளிதாக மாற்ற முடியும். இதன் மேல் பகுதியை லேசாக செதுக்கிவிட்டு, பளபளப்பான வண்ணங்கள் தீட்டி மரக்கிளைகளிலோ அல்லது வீட்டின் மொட்டை மாடியிலோ பாதுகாப்பாக தொங்கவிடலாம்.
இதில் தினமும் குளிர்ந்த தண்ணீர் மற்றும் சிறு தானியங்களை வைத்தால் சிட்டுக்குருவிகள் விரும்பி வரும். இது வீட்டின் வெளிப்புற அழகை பல மடங்கு கூட்டுவதோடு நமது மனதுக்கு ஒரு இனம் புரியாத நிம்மதியையும் தரும்.
படிப்பறையை அழகாகும் பேனா ஸாடான்ட்!
பள்ளி விடுமுறை நாட்களில் மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளை செல்போன் பார்க்க விடாமல் தடுக்க இது ஒரு மிகச் சிறந்த ஈடுபாடு ஆகும். காய்ந்த ஓடுகளை நன்றாக உப்புத்தாள் கொண்டு தேய்த்து வழவழப்பாக மாற்ற வேண்டும். பின்னர் அதில் குழந்தைகளை வைத்து அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் உருவங்களை பெயிண்ட் செய்ய சொல்லுங்கள். இதை அவர்களின் படிக்கும் மேஜையில் ஒரு அழகான மற்றும் பயனுள்ள பேனா தாங்கியாக பயன்படுத்தலாம். இது அவர்களின் உள்ளார்ந்த கற்பனை திறனை பெருமளவு வளர்க்கும்.
கவர்ச்சியான அலங்கார கிண்ணங்கள்!
வெறும் வர்ணங்கள் மட்டுமில்லாமல் சிறு சிறு கண்ணாடிகள், வண்ண கற்கள், கிளிட்டர்கள் மற்றும் குந்தன் கற்களை வைத்து இந்த தடிமனான ஓடுகளை கலைநயமிக்க கிண்ணங்களாக மாற்ற முடியும். பச்சை நிற ஓடுகளை கூட இதற்கு நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். இப்படி மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிண்ணங்களை வரவேற்பறையில் உள்ள சென்டர் டேபிள் மீது வைத்து அதனுள் ரோஜா இதழ்கள் அல்லது நறுமணம் வீசும் உலர் பூக்களை தூவி வைத்தால் அந்த இடமே மிகவும் ராயலாக காட்சியளிக்கும்.
குப்பையில் வீசப்படும் ஒரு பொருளை இவ்வளவு அழகாக மற்றும் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை. இது நமது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது பூமியின் சுற்றுச்சூழலுக்கும் ஒரு மிகப்பெரிய நன்மையை செய்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கையோடு இணைந்து வாழ இது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்.
எனவே, அடுத்த முறை சட்னி அரைக்க தேங்காய் உடைக்கும் போது அந்த தேங்காய் சிரட்டை குப்பையில் வீசாமல், இதுபோல புதுமையான முறையில் மாற்றி உங்கள் வீட்டை ஒரு Eco-friendly மாளிகையாக மாற்றி அசத்துங்கள்.