

ஒவ்வொரு குழந்தைகளும் தனித்துவமானவர்கள், ஒரே வீட்டில் பிறந்த இரு குழந்தைகளுக்குக்கூட குணாதிசயங்கள், திறமைகள், ஆர்வங்கள் என அனைத்தும் வேறுபட்டதாக இருக்கும். ஒருவர் படிப்பில் சிறந்தவராக இருக்கலாம். மற்றொருவர் விளையாட்டு, கலை அல்லது தலைமைத்திறனில் சிறந்து விளங்கலாம். ஆனால், குழந்தைகளின் இந்தத் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளாமல், அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் பழக்கம் (Comparative habit ) பல குடும்பங்களிலும் இயல்பாகக் காணப்படுகிறது.
"உன் அக்கா எவ்வளவு பொறுப்பாக இருக்கிறாள்! உனக்கு எப்போது புத்தி வரும்?" இப்படிப்பட்ட வார்த்தைகளை பெரும்பாலான குழந்தைகள் தங்கள் வளர்ச்சிப் பருவத்தில் ஒருமுறையாவது கேட்டிருப்பார்கள்.
அதேபோல் பள்ளிப் பருவத்திலும், "அவனைப் பார்த்துக் கற்றுக்கொள்!"
"உன் வகுப்பில் இருக்கும் அருண் எப்போதும் முதல் மதிப்பெண் வாங்குகிறான். உன்னால் ஏன் முடியவில்லை?" என்ற ஒப்பீடுகள் அடிக்கடி நிகழ்கின்றன.
பெற்றோர்கள் நல்ல எண்ணத்தில்தான் இவ்வாறு பேசுகிறார்கள். குழந்தைகள் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால் அந்த ஒப்பீடுகள் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல பெற்றோர்கள் சிந்திப்பதில்லை.
ஒப்பீடு செய்யப்படும்போது, குழந்தை தனது தனித்திறமைகளையும் பலங்களையும் கவனிப்பதற்குப் பதிலாக, தன்னிடம் இல்லாதவற்றையே பார்க்கத் தொடங்குகிறது. அதன் விளைவாக, "நான் போதுமானவன் இல்லை" என்ற எண்ணம் மெதுவாக அதன் மனதில் வேரூன்றத் தொடங்குகிறது.
மன அழுத்தத்தின் தொடக்கம்
தொடர்ச்சியான ஒப்பீடுகள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. பெற்றோரின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்குள் உருவாகிறது. எந்த முயற்சியையும் மகிழ்ச்சிக்காக அல்ல, பிறரை மிஞ்சுவதற்காக மட்டுமே செய்யத் தொடங்குகிறார்கள்.
சில குழந்தைகள் அதிகமாகப் படிக்கவும் உழைக்கவும் ஆரம்பிக்கலாம். ஆனால் பல குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து முயற்சியையே கைவிடுகின்றனர். "என்ன செய்தாலும் போதாது" என்ற உணர்வு அவர்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது.
குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பெற்றோரின் ஒப்பீட்டுப் பழக்கம்
ஒப்பீடு கல்வி அல்லது சாதனைகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அது குடும்ப உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன்னை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிடும் பெற்றோரிடம் குழந்தைகள் மனம் திறந்து பேசுவதைக் குறைக்கிறார்கள். தங்களின் தோல்விகள், பயங்கள் அல்லது குழப்பங்களைப் பகிர்ந்துகொள்ள தயங்குகிறார்கள். இதனால் பெற்றோர்–குழந்தை உறவில் தெரியாத ஒரு இடைவெளி உருவாகிறது.
பாராட்டின் சக்தி
உளவியல் நிபுணர்கள் கூறுவதாவது, ஒப்பீட்டைவிட ஊக்குவிப்பும் பாராட்டும்தான் குழந்தைகளை அதிகம் முன்னேற்றுகின்றன.
"சென்ற தேர்வைவிட இப்போது நீ நல்ல மதிப்பெண் எடுத்துள்ளாய். உன் முயற்சியை நான் பாராட்டுகிறேன்."
"உன்னுடைய இந்தத் திறமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது."
இப்படிப்பட்ட வார்த்தைகள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன.
ஒரு குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக, அதன் சொந்த முன்னேற்றத்துடன் ஒப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் போட்டி மனப்பான்மையைவிட வளர்ச்சி மனப்பான்மை உருவாகிறது. மேலும், குழந்தை தனது திறமைகளை நம்பி தொடர்ந்து முன்னேறுவதற்கான உந்துதலையும் பெறுகிறது.
வயது வந்த பிறகும் தொடரும் ஒப்பீட்டுப் பழக்கம் தரும் நீண்டகாலப் பாதிப்புகள்
குழந்தைப் பருவத்தில் தொடர்ந்து ஒப்பீடுகளை எதிர்கொள்ளும் பலர், அதன் தாக்கத்தை வயது வந்த பின்னரும் சுமந்து செல்கின்றனர். சிறுவயதில் உருவாகும் தாழ்வு மனப்பான்மை, பின்னாளில் அவர்களின் முடிவெடுக்கும் திறன், சமூக உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கக்கூடும். தங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம், அவர்களின் மனநிறைவைக் குறைக்கிறது. எவ்வளவு சாதித்தாலும் அது போதுமானதாகத் தெரியாமல் போகலாம்.
மேலும், ஒப்பீட்டின் அடிப்படையில் வளர்ந்த குழந்தைகள் ஒரு செயலை செய்யக்கூட அதிகமாகப் பயப்படுகின்றனர். தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதியாகும் என்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அது தங்களின் மதிப்பைக் குறைக்கும் ஒன்றாகக் கருதத் தொடங்குகிறார்கள். இதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவதும், தங்களின் உண்மையான ஆர்வங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதும் ஏற்படலாம்.
இதற்கு மாற்றாக, குழந்தைகளின் தனித்துவத்தை மதித்து வளர்க்கும் சூழல் அவர்களுக்குள் ஆரோக்கியமான சுயமதிப்பை உருவாக்குகிறது. அவர்கள் பிறருடன் போட்டியிடுவதைவிட தங்களின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இப்படிப்பட்ட மனநிலை, வாழ்க்கையின் பல்வேறு சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையையும் அவர்களுக்கு வழங்குகிறது.
சமூக ஊடக காலத்தில் ஒப்பீட்டுப் பழக்கம் மாற பெற்றோர் செய்ய வேண்டியவை என்ன?
இன்றைய சமூக ஊடக காலத்தில் ஒப்பீடுகள் மேலும் அதிகரித்துள்ளன. நண்பர்களின் மதிப்பெண்கள், திறமைகள் அல்லது சாதனைகளை அடிக்கடி பார்க்கும் குழந்தைகள், தங்களையே குறைவாக மதிப்பிடும் சூழல் உருவாகிறது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு, ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வேறுபட்டது என்பதைப் புரியவைக்க வேண்டும். வெற்றி என்பது மற்றவர்களை மிஞ்சுவதில் அல்ல; தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்துவதில்தான் உள்ளது என்பதை அவர்கள் உணரச் செய்யவேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியது
பெற்றோர் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் மட்டுமல்ல; அவர்களின் முதல் கண்ணாடியும் கூட. அந்தக் கண்ணாடியில் குழந்தைகள் தங்களுடைய மதிப்பையும் திறமையையும் காண்கிறார்கள்.
எனவே, "அவனைப்போல இரு" என்று சொல்வதற்குப் பதிலாக, "நீ உன்னுடைய சிறந்த வடிவமாக மாறு" என்று சொல்வதே சிறந்த பெற்றோரின் அடையாளம். ஒப்பீடு ஒரு குழந்தையின் மனதைச் சுருக்கலாம்; ஆனால் ஏற்றுக்கொள்ளுதலும் ஊக்கமும் அதன் திறமைகளை மலரச்செய்யும்.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனி உலகம். அந்த உலகத்தை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் புரிந்துகொள்வதே உண்மையான வளர்ப்பாகும். இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், உங்கள் பிள்ளைகளின் தனித்துவமான திறமைகளை நீங்கள் கண்டறிந்து, அவர்களை தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து காப்பாற்ற முடியும்.