ஐம்பதிலும் ஆசை வரும்!

ஐம்பதிலும் ஆசை வரும்!

50 பிளஸ்... மெனோபாஸ்... வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவக்கம். 50 வருட வாழ்க்கையில் பெற்றோர்களுக்கு பயந்து… புகுந்த வீட்டில் அத்தை மாமாவுக்கு மரியாதை கொடுத்து... கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு பணிவிடை செய்து நேரம் போனதே தெரியாமல் (விளம்பர அம்மாக்களைப் போல் இல்லாமல்) வேலை வேலை வேலை என்று 24 மணி நேரமும் பம்பரம் போல் சுழன்று, மிச்சம் மீதி சாப்பிட்டு, தூங்கி எழுந்து, மறுநாள் திரும்பவும் அதே கதை! இப்படியேதான் வாழ்க்கை செக்கு மாடாகப் போய்க்கொண்டே இருந்தது.

பிடித்த தலைவரின் படம் ரிலீஸ் ஆனால் கணவரிடம் கேட்க பயம். அப்படியே கேட்டாலும் அப்பா, அம்மாவிடம் சொல் என்றுதான் பதில் வரும். அத்தை, மாமாவை கேட்டாலோ, ‘கடந்த வாரம்தானே ஒரு படம் போனாய்! திரும்பவும் இந்தப் படம் போகணுமா? யோசித்து முடிவெடு’ என்று பந்தை நம் பக்கமே தள்ளி விட்டு விடுவர். இரண்டு நாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, தன்னாலேயே திரும்பவும் சாதாரண நிலைக்கு வந்து இருப்போம்.

அதேபோல்தான் சமையலும். இன்று தக்காளி ரசம் வைத்து உருளை பட்டாணி வறுத்துவிட்டால் போதும் என நினைத்திருப்போம். ஆனால், அப்போதுதான் பிள்ளைகள் வந்து இன்று வெஜிடபிள் பிரியாணி / பக்கோடா குருமாதான் வேண்டும் என்று கூற, மனசில் யோசித்து வைத்திருந்த ரசத்தை தூக்கி போட்டுவிட்டு (கற்பனையில் சாப்பிட்டு கொள்ளலாம் என்று) குருமாவை வைக்க போனதெல்லாம் ஒரு காலம்.

காலாற ஒரு எட்டு நடந்து வடபழனி முருகரை தரிசித்துவிட்டு வரலாம் என நினைத்திருப்போம். ஆனால், அன்றுதான் கரெக்டாக பிள்ளைகளுக்கு நிறைய ஹோம் ஒர்க் கொடுத்திருப்பார்கள். ‘சரி‌ ஆதிரை... என்னை பிறகு பார்க்கலாம். முதலில் ஹோம் ஒர்க் முடி’ என்று சொல்லாமல் சொல்லி புன்னகைப்பார் முருகர். (பக்கத்தில் இருக்கும் வடபழனி முருகருக்கே இந்த நிலைமை என்றால், சற்று தொலைவில் இருக்கும் ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் நிலை?

ஆனால், இந்த 50 பிளஸில்… நான் ‘ஒரு வாரமாக நிறைய வேலை செய்து விட்டேன். இன்று சினிமாவுக்குப் போக வேண்டும். அதனால் தயவு செய்து இரண்டு டிக்கெட்டை ரிசர்வ் செய்துத் தாருங்கள். நானும் என் தோழியும் சென்று வருகிறோம்’ என்று சொல்லி சினிமா பார்க்க முடிகிறது.

ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயரை மட்டுமல்ல, கூட மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் சேர்த்து வணங்கிவிட்டு, கற்பகாம்பாள் மெஸ்ஸில் சுட சுட ஊத்தப்பம், ஜில்லுனு தயிர் வடை, ரோஸ் மில்க் என சாப்பிட்டு வர முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மனதில் நினைத்த / பிடித்த சமையலைச் சுடச் சுட செய்து சாப்பிட முடிகிறது. திருமண நாள், பிறந்த நாள் மற்றும் பண்டிகை தினங்களில் 10 பேருக்கு நம்மால் முடிந்த அளவு சமைத்து பரிமாற முடிகிறது. வீட்டு வேலைகள் செய்து மிச்சமிருக்கும் எஞ்சிய நேரங்களில் திருமணத்துக்குக் காத்திருக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக வரன் பார்க்க முடிகிறது. பத்திரிகைகளுக்கு நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது.

மொத்தத்தில், ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ அந்த ஆசையை இன்று நினைத்தவுடன் செய்து முடிக்க உதவி செய்யும் ஆஞ்சனேயருக்கு இத்தருணத்தில் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com