பிடிவாதமாக இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?

child
child
Published on

ஒரு குழந்தை எப்படி பொறுப்புள்ள மனிதனாக உருவாகிறது, எப்படி மற்றவர்களுடன் பழகுகிறது என்பதையெல்லாம் பெற்றோரின் அணுகுமுறையே பெரும்பாலும் தீர்மானிக்கிறது. சில சமயங்களில், குழந்தைகள் சின்ன விஷயங்களுக்கும் பிடிவாதம் பிடிப்பதற்கு காரணம், பெற்றோரின் வளர்ப்பில் இருக்கும் சில குறைபாடுகளே. அப்படிப்பட்ட பிடிவாதங்களை எப்படி அன்போடு கையாள்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. குழந்தைகளை உற்சாகப்படுத்துவதும் பாராட்டுவதும் ஒரு முக்கியமான விஷயம். குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்படும்போது, அதை மனதார பாராட்டுவது அவசியம். மற்றவர்கள் முன்னிலையில் குழந்தைகளை வாழ்த்தும்போது, அவர்களின் தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும். 

2. குழந்தைகள் தவறு செய்யும்போது, அதை திருத்துவது பெற்றோரின் கடமைதான். ஆனால், மற்றவர்கள் முன்னிலையில் குழந்தைகளைத் திட்டுவது அல்லது அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவது முற்றிலும் தவறான அணுகுமுறை. இது குழந்தைகளின் சுயமரியாதையை குறைத்துவிடும். தவறை சுட்டிக் காட்டவேண்டிய நேரத்தில், தனிமையில் அன்பாக எடுத்துச் சொல்வது நல்லது. கடுமையான வார்த்தைகள் அல்லது திட்டுதல், குழந்தைகளின் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைக்கலாம்.

3. குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நல்ல அறிவுரைகளை வழங்குவது பெற்றோரின் மிக முக்கிய கடமை. ஆனால், அறிவுரை என்ற பெயரில் அவர்களின் செயல்களைக் குறை சொல்வது அல்லது ‘நீ எதைச் செய்தாலும் உருப்பட மாட்டாய்’ என்று பேசுவது, அவர்களை மனதளவில் மிகவும் பாதிக்கும். இது போன்ற வார்த்தைகள், குழந்தைகளை பிடிவாத குணம் கொண்டவர்களாக மாற்றிவிடும்.

4. குழந்தைகளுக்கு ஒரு வேலையை கொடுத்த பிறகு, அவர்கள் அதை முடிக்கும் வரை பொறுமையாக இருப்பது அவசியம். அடிக்கடி குறுக்கிட்டு குறை சொல்லிக் கொண்டே இருந்தாலோ அல்லது அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருந்தாலோ, குழந்தைகளுக்கு அந்த வேலையின் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிடும். பெற்றோரே நம்மை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்து, பிடிவாதமான எதிர்வினைக்கு வழிவகுக்கும்.

5. குழந்தைகள் சிறிய உதவி செய்தால்கூட, அவர்களுக்கு நன்றி சொல்ல மறக்கக் கூடாது. நன்றி கூறுவது ஒரு நல்ல பழக்கம் என்பதை பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் நன்றி சொல்லும்போது, குழந்தைகள் அதை பின்பற்றுவார்கள்.

6. கடைசியாக, ஒழுக்கம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். பெற்றோரின் நடத்தைதான் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதாரணமாக விளங்க வேண்டும். ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சொல்லிக் கொடுப்பது எதிர்காலத்தில் அவர்களை சிறந்த ஒழுக்கமுள்ள மனிதர்களாக மாற்ற உதவும்.

இதையும் படியுங்கள்:
ஒழுக்கம் என்னும் ஒரு பண்பு போதும். ஓராயிரம் படிகள் நம்மை உயர்த்துவதற்கு!
child

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com