கின்ட்சுகி (Kintsugi) என்பது உடைந்த மட்பாண்டங்களை பழுதுபார்க்கும் ஒரு பாரம்பரிய ஜப்பானிய கலையாகும். உடைந்த பகுதிகள் அரக்கு அல்லது பொடி செய்யப்பட்ட தங்கம், வெள்ளி அல்லது பிளாட்டினத்துடன் கலக்கப்படுகிறது. பின்பு அது ஒரு அழகான கலைப்பொருளாக உருவாக்கப்படுகிறது. இந்த நுட்பத்தை நம்முடைய வாழ்விலும் பயன்படுத்தி மேன்மை பெறலாம்.
கின்ட்சுகி உணர்த்தும் தத்துவம்: கின்ட்சுகி எனும் நுட்பம், ஜப்பானிய கலாசாரம் மற்றும் கைவினைத்திறனின் பிரதிபலிப்பாகும். உடைந்த பொருட்கள் எப்போதுமே வீண் என்று அர்த்தம் இல்லை. அவற்றை வேறொரு பொருளுடன் கலந்துவிட்டால், அதற்கு அழகையும் வாழ்வும் தர முடியும் என்பதை உணர்த்துகிறது.
மனிதர்கள் பலமும் பலவீனமும் நிறைந்தவர்கள். தன்மையும் தவறுகளும் கொண்டவர்கள். தவறு செய்த மனிதனை ஒதுக்கி வைப்பதும், வெறுப்பதும் தேவையில்லை. ஜப்பானியர்களைப் பொறுத்தவரை, ‘கின்ட்சுகி’ என்பது நமது மனித குறைபாடுகள் மற்றும் வாழ்க்கையின் பலவீனத்தை தழுவும் ஒரு தத்துவத்தின் பகுதி ஆகும். அவர்கள் குறைபாடுகளைக் கொண்டாடுகிறார்கள். துன்பங்களை அழகாகவும் மீள் தன்மையுடன் மாற்ற முடியும் என்று கின்ட்சுகி நமக்குக் கற்பிக்கிறது.
குறைபாடுகளைக் கொண்டாடுங்கள்: வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. சில சமயங்களில் எதிர்பாராத நிகழ்வுகளால் நம் வாழ்க்கையும் கனவுகளும் சிதைந்து விடும். காலப்போக்கில் நமது காயங்களில் இருந்து நாம் குணமடையலாம். நமது குறைபாடுகளைத் தழுவி பலம் பெறலாம் என்பது கின்ட்சுகியின் தத்துவம்.
தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக நமது குறைபாடுகள் மற்றும் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைக் கொண்டாட வேண்டும். வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாக இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உணர்ச்சி ரீதியான பின்னடைவும், மேம்பாடும்: ஒருவர் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான பின்னடைவுகளை சந்திக்கும்போது உடைந்த பானை எப்படி தங்கம் மற்றும் வெள்ளியால் மதிப்புமிக்க பொருளாக மாறுகிறதோ, அதைப்போலத்தான் குணமடைவதிலும் வலிமை அடைவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மிக விரைவில் பின்னடைவு மேம்பாடாக மாறும்.
உறவுகள்: உறவுகளுக்குள் மோதல்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய வேண்டும். குறைகளைப் பொருட்படுத்தாமல் அவற்றை வலுவாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற வேண்டும். மற்றவர்களின் தனித்துவமான குணங்கள் மற்றும் குறைபாடுகளை வெறுக்காமல் மதிக்க வேண்டும். இந்த குணாதிசயங்கள் அவர்களின் தனித்துவத்திற்கும் அழகுக்கும் பங்களிக்கின்றன என்பதை உணர வேண்டும்.
பொறுமை: கின்ட்சுகி ஒருவருக்கு பொறுமையை கற்றுக் கொடுக்கிறது. தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவதன் மூலமும் அன்றாட வாழ்க்கையில் அழகைப் பாராட்டுவதன் மூலமும் ஒருவருக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். எதிர்மறை அனுபவங்களை நேர்மறையான விளைவுகளாக மாற்றுவதற்கான உருவகமாக கின்ட்சுகியை பயன்படுத்தலாம். கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்த தத்துவத்தைப் பயன்படுத்தலாம்.