நாம் சொல்லவரும் கருத்து நியாயமானதாக இருந்தாலும், மற்றவர்கள் கூக்குரல் எழுப்பிப் பேசும்பொழுது அதை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது நமக்கும் ஒரு தவறான தோற்றத்தைத் தந்து விடும். ‘குரலினை உயர்த்திப் பேசுவது நல்லதா?’ என்று எவரிடம் கேட்டாலும், ‘நல்லது இல்லை’ என்றே உரைப்பார்கள். ஆனால், சினம் கொள்ளும்போதும், நாம் கூறிய கருத்தினை மறுத்துப் பேசும்பொழுதும் நம் குரலினை உயர்த்தியே பேச வேண்டிய கட்டாயமும் வருகிறது.
அந்நேரம் இதயத் துடிப்பு சாதாரண அளவுகளைக் கடந்து உயர் மன அழுத்த நிலையால் நாளங்கள் தடித்து, கண்கள் சிவந்து சினத்தின் உயரத்திற்கே நம்மை அறியாமல் சென்று விடுகின்றோம். இப்படி நம்மிடம் இடையிடையே நிகழ்வதனால் பல வேண்டாத விளைவுகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுகின்றன.
இவையெல்லாம் அமைதியாக இருக்கும்பொழுது நமக்கே நன்கு புரியும். ஆனால், இதயத்தின் துடிப்புகள் அளவை மீறும்பொழுது அது நம் மூளையின் செயல்பாடுகள் சீர்குலைகிறது என எவரும் அறிவது இல்லை.
குரலினை உயர்த்திப் பேசும்பொழுது நாம் மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப் போய் விடுகிறோம். அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது. அது ஒரு தரக்குறைவான செயல். அமைதியின் சக்தியை எவரும் புரிந்து கொள்வதில்லை என்பதே குரலினை உயர்த்திப் பேசக் காரணமாக இருக்கிறது.
அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். மாறாக, தம் குரலினை உயர்த்தியே பேசுபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக் கொண்டால்தான் நாம் நினைத்ததை சாதிக்கவியலும். உளவியல் முறையாக பார்க்கும்பொழுது அது ஒரு இயலாமை. குரலினை உயர்த்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது. இவ்வாறு உரக்க ஓலமிட்டு குரலெழுப்புவதால் எவரும் தன் வலிமையை நிலைநாட்ட இயலாது. மேலும், குரலினை உயர்த்திப் பேசுவது பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. உரக்கப் பேசும்பொழுது சிந்தனையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் கவனமும் சிதறுகிறது.
இந்நிலையில் பல தவறுகள் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது. உரக்கப் பேசுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. எந்தவொரு செயலையும் அமைதியாக எதிர்கொள்ளும்போது சிக்கல்கள் எளிதாகி விடும். குரலினை உயர்த்திப் பேசுவதால் அது மேலும் சிக்கலாகி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.