தினமும் காலையில் எழுந்து பல் தேய்த்ததும் ஒரு கப் காபி பருகாவிட்டால் அன்றைய நாளே உற்சாகமாக இருக்காது. சிலருக்கு புது டிகாஷனில் போட்ட காபி பிடிக்கும். சிலர் இன்ஸ்டன்ட் காஃபி தூளை உபயோகித்து காபி தயாரிப்பார்கள். வெளியிடங்களில் காபியின் விலை கடைக்கு கடை மாறுபடும். தெருவோர சிறிய டீக்கடைகளில் 20 ரூபாயில் ஆரம்பித்து ஸ்டார் ஹோட்டல்களில் 200, 300 ரூபாய் வரைக்கும் கூட இருக்கும். ஆனால், உலகின் மிக விலை உயர்ந்த முதல் தரமான காபி வகைகள் மூன்று இருக்கின்றன. அவற்றின் விலை விபரத்தையும் அவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதை பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கோபி லுவாக், (kopi luvak): உலகின் மிக விலையுயர்ந்த காபி இந்தோனேசியாவின் கோபி லுவாக், (kopi luvak). இதன் விலை இந்தியாவில் 8000, வெளிநாட்டில் ₹25000 வரை விற்கிறது. எதனால் இவ்வளவு அதிகமான விலை வைத்து இது விற்கப்படுகிறது? ஏனென்றால் இந்த காபி பீன்களை பதப்படுத்துவதற்கு ஒரு அசாதாரணமான வழியை கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த அரிய வகை காபி. civet எனும் புனுகு பூனையின் கழிவிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. காபி தயாரிக்கப் பயன்படும் செர்ரி பழங்களைப் பூனை உண்டு விடும். அதன் கொட்டை ஜீரணம் ஆகாது. அதன் உடலில் சுரக்கும் நொதிகளினால் காபி கொட்டைகள் செறிவூட்டப்படுகின்றன. அதன் கழிவிலிருந்து கொட்டைகளை எடுத்து சுத்தம் செய்து இந்த காபி தயாரிக்கப்படுகிறது.
2. பிளாக் ஐவரி காபி: இது தாய்லாந்தில் உள்ள பிளாக் ஐவரி காபி நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் அரிதான காபி. இது அரேபிகா பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு காபி விலை 500 அமெரிக்க டாலர். இது ஏன் இவ்வளவு விலை என்று பார்த்தால் இதன் தயாரிப்பும் சற்றே அசாதாரணமானதுதான். இதுவும் கோபி லுவாக் காஃபியை போன்றே தயாரிக்கப்படுகிறது. யானைகளால் உண்ணப்பட்டு இயற்கையாக பதப்படுத்தப்பட்ட காபி கொட்டைகளைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படுவதால் இது தனித்துவமானது.
யானைகளுக்கு அரபிகா காபி செர்ரிக்களை உண்ணக் கொடுப்பார்கள். யானைகள் காபி செர்ரிகளை உட்கொண்ட பிறகு, அவற்றின் சாணத்திலிருந்து பீன்ஸ் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, வறுக்கப்பட்டு காபி தயாரிக்கப்படுகிறது. செர்ரி பழங்கள் யானைகளின் செரிமான அமைப்புகளை கடந்து செல்லும்போது, அவற்றின் வயிற்று அமிலம் பீன் புரதங்களை உடைக்கிறது. இந்த செயல்முறை காபியின் கசப்பைக் குறைத்து அதிக சுவையூட்டுவதாக நம்பப்படுகிறது. சுமார் ஒரு கிலோ ருசிமிக்க காபி கொட்டையை சேகரிக்க யானையின் வாயில் 33 கிலோ காபி பழங்களை திணிப்பார்கள்.
3. ஹசீண்டா லா எஸ்மரால்டா காபி (Hacienda La Esmeralda Coffee): இது பனாமாவிலிருந்து வரும் மிகவும் சிறப்பான மற்றும் விலையுயர்ந்த காபி. அது தனது தனித்துவமான சுவைக்கு பிரபலமானது மட்டுமின்றி, பல விருதுகளையும் வென்றுள்ளது. காபி ஹசியெண்டா லா எஸ்மரால்டா பண்ணையில் அதிக உயரத்தில் வளர்க்கப்படுகிறது. இந்த காபி பனாமாவில் உள்ள பாரு மலையின் உச்சியில் கொய்யா செடிகளின் நிழலில் வளர்க்கப்படும் கெய்ஷா பீனில் இருந்து வருகிறது. பண்ணையின் அதிக உயரம், ஊட்டச்சத்து நிறைந்த எரிமலை மண் மற்றும் நுணுக்கமான சாகுபடி நடைமுறைகள் இந்த காபியின் சிறந்த சுவை மற்றும் தரத்திற்கு பங்களிக்கின்றன.