
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன் என்ன வேலை இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுடன் சிறிது நேரமாவது உரையாட வேண்டும். அந்தக் குழந்தைகளிடம் அரவணைப்புடன், "இன்று பள்ளியில் என்ன நடந்தது?” என்று அன்புடன் விசாரிக்க வேண்டும்.
அந்தக் குழந்தைக்கு பள்ளியில் ஏதும் மன ரீதியான பாதிப்புகள் இருந்தால், உடனே அதைத் தீர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இப்படி நீங்கள் அன்பாகப் பேசினாலே போதும், குழந்தைகள் எப்போதும் உங்கள் பக்கம்தான்.
குழந்தைகளுடன் இருக்க அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும். ‘இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள்’ என்ற பயம் இல்லாமல் எதைப் பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஏற்படுத்துங்கள். அப்போதுதான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் குழந்தை ஒரு தவறு செய்து விட்டால் உடனே கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
அப்படிச் செய்தால், அடுத்த முறை தான் செய்த தவறை உங்களிடமிருந்து அவர்கள் மறைக்கப் பார்ப்பார்கள். அதற்கு பதில், அந்தத் தவறைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்போதுதான் அடுத்த முறை அந்தத் தவறை அவர்கள் செய்யத் தயங்குவார்கள். வீட்டில் பெற்றோர்கள், குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையான அணுகுமுறை கொண்டிருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
அன்புமதி ஒரு 10 வயது சிறுவன். அவனது தந்தை தனது மகனுடன் நேரத்தை செலவிட முடியாத மிகவும் ஓய்வு இல்லாத தொழிலதிபர். அன்புமதி தனது தந்தையின் அரவணைப்புக்கு ஏங்கினான். அவன் தனது நண்பர்களைப் போலவே வெளியில் சென்று தந்தையுடன் விளையாட விரும்பினான்.
ஒரு நாள், மாலை தனது தந்தையை வீட்டில் பார்த்த அன்புமதி ஆச்சரியப்பட்டான். “அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம்" என்று கூறினான்.
“ஆமாம் மகனே, என் அலுவலகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே நான் வீட்டிற்கு வந்து விட்டேன். ஆனால், இரண்டு மணி நேரம் கழித்து நான் விமான நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது" என்று அவனது தந்தை பதில் அளித்தார்.
அன்பு சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் அவன், “அப்பா, நீங்கள் ஒரு நாளில் அல்லது அரை நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
தந்தை குழப்பம் அடைந்து மகனிடம், “நீ ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?" என்று கேட்டார்.
ஆனால் விடாப்பிடியாக, “ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் அப்பா” என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.
அந்தக் கேள்வியை தவிர்க்க முடியாமல், “ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் இருக்கும்" என்று பதிலளித்தார் அப்பா.
அன்பு தனது அறைக்கு ஓடி, தான் இதுநாள் வரை சேமித்து வைத்த உண்டியலுடன் கீழே வந்தான். “அப்பா, எனது உண்டியலில் 20 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்து இருக்கிறேன். எனக்காக இரண்டு மணி நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமா? நான் கடற்கரைக்குச் சென்று நாளை மாலை உங்களுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன். இதை உங்கள் அட்டவணையில் சேர்க்க முடியுமா?" என்று கேட்டான்.
அதைக்கேட்டு தந்தை பேச்சற்று இருந்தார்!
குழந்தைகளுடன் நேரம் கிடைக்கும்போது அவர்களுடன் உரையாடுங்கள். அவர்களின் விரும்பு, வெறுப்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உறவுகள், உறவு முறைகளை எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகளுடன் சிறிது நேரமாவது விளையாடுங்கள். நீங்கள், எவ்வளவு செலவு செய்து, குழந்தைக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தாலும், நீங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்கும் நேரம் ஒன்றுதான் பணம், பொருள் எல்லாவற்றையும் விட உயர்ந்தது.