குழந்தை வளர்ப்பு (parenting) என்றால் கைக் குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப வயது வரை ஒரு குழந்தைக்கு உணவு மற்றும் பாதுகாப்பளித்து, வழிகாட்டியாயிருந்து அவர்கள் உடல், மனம், உணர்வு, படிப்பறிவு மற்றும் சமூக ரீதியாக முன்னேற்றம் அடையும் வரை உடனிருந்து பொறுப்புணர்வோடு பார்த்துக் கொள்ளுதல் எனலாம்.
லைட்ஹவுஸ் பேரென்டிங் என்பதை ஒரு குறிப்பிட்ட வகை குழந்தை வளர்ப்புக் கலை எனலாம். இதில் நாம் ஒரு கலங்கரை விளக்கு போல் இருந்து கொண்டு குழந்தைகளின் வாழ்க்கைப் படகை அவர்களே சுதந்திரமாக இயக்க அனுமதிப்பது என்று கூறலாம். கடலில் எந்த இடத்தில் பாறை உள்ளது, எந்த இடம் சாதகமான சூழ்நிலையற்றது போன்ற விவரங்களை எடுத்துக் கூறி நாம் வழி காட்டலாம்.
உதாரணமாக, குழந்தை வீட்டுப் பாடத்தை முடித்து நோட்டை மறுநாள் எடுத்துச் செல்ல நினைவூட்டலாம். குழந்தை அதை மறந்து விட்டால் நோட்டை நாம் எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்கு ஓடுவது தவறு. விளைவுகளை எதிர்கொண்டு பிழைகளைத் திருத்திக்கொள்ள அதுவாக கற்றுக்கொள்ள வகை செய்ய வேண்டும். உடன் பிறப்போடு சண்டையிடும்போது நம் தலையீடு கூடாது. அவர்களாகவே சமாதானமாக விட்டுவிட வேண்டும்.
லைட்ஹவுஸ் பேரென்டிங் முறையில் குழந்தையின் பாதுகாப்பிற்காக நாம் ஒரு எல்லைக் கோட்டை நிர்ணயித்துக்கொள்வதும் அவசியம். குழந்தை சுயமாகவே தனது வாழ்க்கையை சிறந்த முறையில் நடத்த கற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவர்களின் பாதுகாப்பை எல்லா சூழ்நிலைகளிலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது நம் கடமை.
பெரியவர்களின் வழிகாட்டுதலோடு சுதந்திரமாக வளர்ந்து வரும் குழந்தை டீனேஜ் பருவத்தை அடையும்போது உலகை தனது பார்வையாலேயே காண விரும்புவது இயற்கை. அந்த நேரங்களிலும் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களை நம் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே வைத்துக் கண்காணிப்பது அவசியம். அவர்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை அவர்கள் உணரும்படியாக நாம் வெளிப்படுத்த வேண்டும். அது அவர்களின் தன்னம்பிக்கை வளர உதவும்.
அவர்கள் தோல்வியடையும்போதும், தவறு செய்யும்போதும் அதிகம் திட்டாமலும், தண்டனை வழங்காமலும் சுமுகமாக நடந்து கொண்டால் அவர்கள் நம்மை விட்டு ஒதுங்கிவிட நினைக்காமல் தனது தவறை உணர்ந்து முன்னேற முயற்சிப்பார்கள் என்பது திண்ணம். டீனேஜ் பிள்ளைகள் அன்பையும் வழி காட்டுதலையும் விரும்புவர். ஆனால், அதிகாரத்தை அவர்களால் ஜீரணிக்க முடியாது.
லைட்ஹவுஸ் பேரென்டிங் மூலம் கிடைக்கும் நன்மைகள்: குழந்தை பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பின் துணையோடு தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் பெற்று வளர முடியும். முடிவுகளை தானே எடுக்கவும், சவால்களை சந்திக்கவும் துணிவு கிடைக்கும். தவறுகளைத் திருத்தி உயர உயர வளர மைன்ட் செட் பண்ணிக்கொண்டு அவர்கள் திறமைகளை வளர்க்கவும் முன்னேறவும் முடியும். முக்கியமாக, பெற்றோர் - பிள்ளைகள் உறவு அற்புதமாகும்.