எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் ஏற்படும். சிலருக்கு குறிப்பிட்ட சில சூழலில் மட்டும் பயம் வந்து போகும். இதை நீடிக்கவிட்டால் அதுவே நோயாக மாறிவிடும். சிலர் எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள். வருங்காலத்தைப் பற்றியோ அல்லது தனக்கு ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ என்று பயந்து போவார்கள். இந்த மன பதற்றம் நம்மை அமைதியின்மைக்கு தள்ளிவிடும். சாதாரண பயம், பதற்றம் பீதியாக மாறி, நம் இயல்பு வாழ்க்கையை பாதிக்குமானால் அதற்கு சிகிச்சை தேவை.
எல்லோருக்குமே மனப்பதற்றம் இருக்கும். புதிய அல்லது முக்கியமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது இது ஏற்படும். ஆனால், சிறிது நேரத்திலேயே அது சரியாகிவிடும். இதற்கு பயப்படத் தேவையில்லை. மனப்பதற்றம், பயம் அதிகமானால் உடல் கோளாறுகள் நிறைய ஏற்பட்டுவிடும். தலைவலி, உடல் வலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பதற்றமின்றி உடலையும் மனதையும் வைத்துக்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அவை:
1. நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
2. மனதுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய நேரம் ஒதுக்கி தினமும் செய்தல் வேண்டும்.
3. ஆரோக்கியமான, சத்துள்ள உணவுகளை உண்ணுதல் அவசியம். நம் தினசரி உணவுகளில் காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
4. மனம் விட்டு பேசக்கூடிய வகையில் சில நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
5. தினமும் சிறிதளவு உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ய, மனம் லேசாகும்.
6. நல்ல உறக்கம் தேவை. தினம் 7 முதல் 8 மணி நேரம் உறங்குதல் நம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
7. தினமும் காலை, மாலை என இரு வேளையும் பத்து நிமிடங்கள் தியானம் செய்வது நம் மனதை அமைதிப்படுத்தும்.
8. நம்மை ஊக்கப்படுத்தும் செயல்களைச் செய்யலாம். நல்ல இசையை கேட்பது, ருசியாக சமைப்பது, பிடித்த விளையாட்டை விளையாடுதல் என மனதையும் உடலையும் சுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் விஷயங்களைச் செய்யலாம்.
9. நடனம் ஒரு சிறந்த மனதை லேசாக்கும் பயிற்சியாகும். இதற்கு நமக்கு நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நமக்குப் பிடித்த பாடலைப் போட்டு அதற்கு ஏற்றவாறு நமக்குத் தெரிந்த வகையில் கை, கால்களை அசைத்து ஆடும்போது மனம் லேசாகிவிடும்.