சேலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது இனிக்கும் மாம்பழம் தான். ஆனால் மாம்பழத்தை விட சுவாரஸ்யமான பல விஷயங்கள் சேலத்தில் உள்ளது. ஆம் இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமை பெற்றது நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம்தான்.
இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. அப்போது மன்னர் திப்பு சுல்தானை ஆங்கிலேயேர்கள் சூழ்ச்சியின் மூலம் வென்றார்கள். தற்போது தனித்தனி மாவட்டங்களாக உள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 7 ஆயிரத்தி 530 சதுர கி.மீ கொண்ட பகுதியாக சேலம் மாவட்டம் இருந்தது. அலெக்சாண்டர் ரீட் என்பவர் அன்றைய சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக 1792 முதல் 1799ம் ஆண்டுவரை பதவில் இருந்தார்.
சேலம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஆங்கிலேயேர்களால் உருவாக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது 158வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது சேலம்.
சேலமும் சுற்றியுள்ள ஊர்களும் மாம்பழ உற்பத்தியில் சிறப்பதால் இதற்கு "மாங்கனி மாநகரம்" என்ற பெயரும் உண்டு. தற்சமயம் இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை அமைந்திருப்பதால் "ஸ்டீல் சிட்டி" என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு மூன்று முதலமைச்சர்கள் தந்த மாவட்டம் எனும் பெருமை சேலத்திற்கு உண்டு. 1917இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகராட்சி தலைவரான ராஜாஜி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த சுப்பராயன் 1926ம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வராகவும், அடுத்ததாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி என மூன்று முதலமைச்சர்கள் சேலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவாசிகளுக்கு ஏற்ற மாவட்டமாகவும் சேலம் உள்ளது. இங்குள்ள "ஏழைகளின் ஊட்டி"யான ஏற்காடு சுற்றுலாவுக்கு மிகச்சிறந்த மலை வாசஸ்தலமாகிறது.டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை மற்றும் பூங்கா, ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரும்பம்பட்டி வன உயிரில் பூங்கா ஆகியவைகள் சுற்றுலாவுக்கு சிறப்பு.
1937 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான் என்ற சிறப்பு பெற்றது. மேலும் இங்குள்ள ரயில்வே ஜங்ஷனின் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகிறது.
சேலம் வணிகத்தில் பெயர் பெற்ற மாவட்டம். இங்கு பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறியும், ஜவ்வரிசி உற்பத்தியும், வெள்ளி கொலுசுகள் தொழிலும் ஆகும். இத்துடன் பெருமளவு மரவள்ளிக்கிழங்கு, பூக்கள், பழங்கள் என பல விவசாய தொழில்களும் உண்டு ஜவ்வரிசி ,பட்டு ஆடைகள் ,பூ வகைகள் ,வெள்ளி கொலுசுகள், தேங்காய் நார் கயிறுகள் என பல வகையான பொருட்கள் சேலத்திலிருந்து ஏற்றுமதியாகிறது.
கலைகளுக்கும் சேலம் பிரசித்திபெற்றதாக விளங்குகிறது. ஆம்..சேலத்தில் இருந்து இயங்கிய 'மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனம் தமிழ் சினிமாவின் முக்கிய பங்கு வகித்ததை அறிவோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கு கலைப் பயணத்தின் முதல் புள்ளியாக விளங்கியது சேலம்.தமிழக சினிமா வரலாற்றில் சேலம் மாடர்ன்தியேட்டருக்கு தனி இடம் உண்டு.
சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக உள்ளது. தற்போது கும்பாபிஷேகமான கோட்டை மாரியம்மன் கோவில் , 2000 வருடங்கள் பழமையான சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை அழகிரிநாதர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், குழந்தை இயேசு பேராலயம் , அயோத்தியபட்டினம் ராமர் கோவில் , உலகின் மிக உயரமான முத்துமலை முருகன் கோவில், எருமாபாளையம் ராமானுஜர் மண்டபம், சேலம் 1008 சிவலிங்கம் கோவில், திப்பு சுல்தான் கட்டிய ஜமா மஸ்ஜித் என நீண்ட பட்டியலே இருக்கிறது
சேலத்தின் வரலாற்று சிறப்புகள் ஏராளம்.ஆறகளூர் புத்தர் கோவில், சிற்பக்கலையில் சிகரமாக விளங்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், ஆடியில் 22 நாட்கள் திருவிழா நடக்கும் கோட்டை மாரியம்மன் கோவில், 150 ஆண்டுகள் பழமையான லெக்லர் சர்ச் மகாத்மா காந்தி தங்கிய அஞ்சல் அலுவலகம், நகரசபை சார்பில் முதன் முதலாக துவங்கப்பட்ட அரசுக் கல்லூரி என சான்றாக இருக்கும் நினைவுச்சின்னங்கள் ஏராளம்.