உங்கள் கணவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாரா?

Husband and Wife
Husband and Wife

- தா.சரவணா

டெக்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு சொற்பொழிவாளர், கூட்டத்தில் இருந்த ஒரு தம்பதியரை அழைத்து , மனைவியிடம் கேட்டார், ‛உங்கள் கணவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாரா?’

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.

ஆனால், அந்த மனைவி தெளிவாக ‛இல்லை, என் கணவர் என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை’ என்றார். கணவர் அதிர்ந்தார். மனைவி தொடர்ந்தார்:

‛என் கணவர் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. என்னை மகிழ்ச்சிப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? என்பது நான் சம்பந்தப்பட்ட விசயம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மகிழ்ச்சியாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் மகிழ்ச்சியாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்.

நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, மகிழ்ச்சிகள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன நலம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்.

இதையும் படியுங்கள்:
பருவமழைக் காலங்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Husband and Wife

என்ன ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் மகிழ்ச்சி குறைவதில்லை. வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் மகிழ்ச்சி குறைவதில்லை. திருமணத்துக்கு முன்னும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன், பின்னும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என்னை பற்றி எனக்கே மகிழ்ச்சியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம், என் வாழ்க்கை மற்றவர்களுடையதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் மகிழ்ச்சிக்கு பொறுப்பு. இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், என் வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்து வருகிறது’. என்றார்.

இவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் கைதட்டினர்.

உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். உங்கள் மனதில் உள்ள மகிழ்ச்சியை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் மனதார மதிக்கும் வரை உங்களுக்குள் நீங்களே மகிழ்ச்சிபட்டு கொள்வீர்கள். மகிழ்ச்சி உங்களுக்குள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com