சமையல் பயம் இனி வேண்டாம்… சுவை கூட்டும் ரகசியங்கள்!

Male Cooking
Cooking tips
Updated on

சமையலில் ஒரு சிறிய தவறு கூட உணவின் சுவையையே மாற்றிவிடும் என்ற அச்சம், சமைப்பதில் இருந்து பலரைத் தடுக்கிறது. ஒருவேளை நீங்கள் சமையலில் புதியவராக இருந்தால் அல்லது உங்கள் சமையல் திறனை மேம்படுத்த விரும்பினால், கவலை வேண்டாம். சில எளிய நுட்பங்கள் உங்கள் உணவை இன்னும் சுவையாகவும், சமைக்கும் அனுபவத்தை மகிழ்ச்சியானதாகவும் மாற்றும். 

சில சுவாரசியமான சமையல் குறிப்புகள்:

  • வெங்காய பக்கோடா செய்யும் போது, அவை மொறுமொறுப்பாக இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மாவுடன் சிறிதளவு அரிசி மாவை சேர்த்துப் பாருங்கள். பக்கோடாக்கள் பொன்னிறமாக மொறுமொறுவென்று வருவதுடன், சுவையும் அதிகரிக்கும். 

  • எந்த இனிப்பு வகைகளையும் தயாரிக்கும் போது, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பது அதன் சுவையை மேம்படுத்தும் ஒரு சிறிய ரகசியம். உப்பு, இனிப்பின் சுவையை சமன் செய்து, அதை மேலும் வெளிப்படுத்தும்.

  • சாதம் சமைக்கும் போது, பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்ப்பது, சாதம் பஞ்சுபோன்றதாகவும், வெண்மையாகவும் மாற உதவும். இது சாதத்திற்கு ஒரு தனிப்பட்ட சுவையையும், மென்மையையும் தரும். 

  • அசைவக் குழம்புகள், குறிப்பாக சிக்கன் அல்லது மட்டன் கிரேவி சமைக்கும்போது, சுவையை இரட்டிப்பாக்க ஒரு எளிய தந்திரம் உள்ளது. வெங்காயத்தை வதக்கும் போது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால், அது காராமல் ஆகி, குழம்புக்கு அற்புதமான நிறத்தையும், இனிமையான சுவையையும் கொடுக்கும்.

  • பூரி பொரிக்கும் முன், அவற்றை பத்து நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அவை எண்ணெய் அதிகம் உறிஞ்சாமல், புசுபுசுவென்று வரும். 

  • ஹல்வா செய்ய ரவையை வறுக்கும்போது, அதனுடன் அரை தேக்கரண்டி கடலை மாவு சேர்ப்பது, ஹல்வாவின் சுவையை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும். 

  • குழம்புகளில் அதிகப்படியான எண்ணெய் அல்லது நெய் மிதந்தால், அவற்றை குளிர்சாதனப் பெட்டியின் உறைவிப்பானில் சிறிது நேரம் வையுங்கள். எண்ணெய் கெட்டியாகிவிடும். அதை எளிதாக நீக்கிவிட்டு, மீண்டும் சூடு செய்து பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
கொழ கொழா வெண்டை நீரை (Okra water) விரும்பி அருந்த 3 முத்தான ஆலோசனைகள்!
Male Cooking
  • வெண்டைக்காய் சமைக்கும் போது ஏற்படும் பிசுபிசுப்பை தவிர்க்க, சமைக்கும் போது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது பிசுபிசுப்புத் தன்மையை நீக்கும். மேலும், ஒரு தேக்கரண்டி வறுத்த கடலை மாவை சேர்ப்பது, வெண்டைக்காயை மொறுமொறுப்பாக்கி, அதன் சுவையையும் அதிகரிக்கும். 

  • ஆம்லெட் மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் இருக்க, முட்டையுடன் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து அடித்து சமைத்துப் பாருங்கள். ஆம்லெட் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

இந்த எளிய குறிப்புகள் உங்கள் சமையலை மெருகூட்டுவதுடன், சமைக்கும் அனுபவத்தையும் இனிமையாக்கும். பயமின்றி சமையலறையில் நுழைந்து, இந்த தந்திரங்களை முயற்சித்து, உங்கள் உணவை மேலும் சுவையாக்குங்கள். 

logo
Kalki Online
kalkionline.com