
உலகிலேயே மக்கதிட்டங்க தொகையில் முதலாவதாக திகழ்வது நம் இந்தியா. அதற்கேற்றார் போல் வளர்ச்சியிலும் இன்றைய இளைஞர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் பல காரணங்களால் முதியவர்கள் கைவிடபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் என்னென்ன அடிப்படை திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
முதியவர்களுக்கான திட்டங்கள்:
சுகாதாரத் சம்பந்தமான திட்டங்களில், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) என்ற திட்டம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை சுகாதார பாதுகாப்பு வழங்குகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதன் மூலம் சிகிச்சை பெற முடிவதால் முதியவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதோடு மற்றொரு சுகாதார சேவையான முதியோர்களின் சுகாதாரப் பாதுகாப்பு தேசியத் திட்டம் (National Programme for Health Care of the Elderly) மூத்த குடிமக்களுக்கு கூடுதல் பயன்தரக்கூடியதாகும்.
தங்களின் நிதிப் பாதுகாப்பிற்காக, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (Senior Citizens Savings Scheme) தேர்வு செய்யலாம். இது சுமார் 8.2% வட்டி விகிதத்தையும் Section 80C இன் கீழ் சில வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana) என எல்ஐசியால் நிர்வகிக்கப்படும் மற்றொரு ஓய்வூதியத் திட்டம். தோராயமாக 7.4% வட்டி விகிதத்துடன் ஓய்வூதியம் தருகிறார்கள்.
கூடுதலாக, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme) அதன் மூலம் வரும் மாத வருமானத்தை சுமார் 7.4% வட்டி விகிதத்துடன் வழங்குகிறார்கள்.
பின் மூத்த குடிமக்கள் பல வருமான வரிச் சலுகைகளையும் அனுபவிக்க முடியும். குறிப்பாக 60 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என தனித்தனி வரி விலக்குகள் (Tax exemptions) கிடைக்கிறது.
'Reverse Mortgage Scheme' என்னும் திட்டம் மூத்த குடிமக்கள் தங்கள் வீட்டை வங்கிகளிடம் அடமானம் வைத்து அதன் மூலம் வாழும் காலம் வரை மாதந்தோறும் வருமானத்தைப் பெற அனுமதிக்கிறது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியவர்களுக்கு சில நிதி உதவிகளை வழங்குகிறது.
'Varishta Mediclaim Policy' போன்ற காப்பீட்டுத் திட்டங்கள், மூத்த குடிமக்களின் மருத்துவ சார்ந்த சேவைகளை (வீட்டில் இருந்தவாரே அல்லது மருத்துவமனைகளில்) தகுந்த சலுகைகளோடு பல பயன்களைப் பெற வழிவகுக்கிறது.
திட்டங்களை எவ்வாறு அணுகலாம்?
இந்த பலன்களை சிரமப்படாமல் அணுக மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களுக்கு ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தலாம்.
அதாவது நேஷனல் போர்ட்டல் ஆஃப் இந்தியா (National Portal of India) அல்லது மாநில அரசு இணையதளங்கள் மூலம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமோ, உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக மையங்களின் மூலமோ உதவியை பெறலாம். சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தொலைபேசி உதவி எண்களை கூட அணுகலாம்.
இந்த நன்மைகளை பெறுவதற்கு வயதுச் சான்று, அடையாளச் சான்று, வசிப்பிடச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். மூத்த குடிமக்கள் தங்களுக்குத் தகுதியான பலன்களைப் பெறுவதை உறுதிப்படுத்த, இத்திட்டங்களின் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
ஆக, இந்திய அரசாங்கம் மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிப்பதற்கு மாநில அரசுகள் மற்றும் பிற சமூகங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் அருகில் இருக்கும் முதியவர்களுக்கோ இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பலனடைய உதவுங்கள்.