வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் கேஸ்களில் இருந்து வெளியாகும் அதிகப்படியான நைட்ரஜன் டை ஆக்சைடு ஆஸ்துமா பிரச்சனையை உண்டாக்குகிறது.
மனிதர்கள் உருவாக்கும் செயற்கையான கண்டுபிடிப்புகள் பல்வேறு வகைகளில் பயன் தந்தாலும் ஒரு சில வகைகளில் ஆபத்தாகவும் இருக்கின்றன. உலகம் முழுவதும் காற்று மாசிக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஒவ்வொரு வீடுகளிலும் அதிகப்படியான காற்று மாசு உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஐரோப்பிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் கேஸ்களில் இருந்து அதிகப்படியான நைட்ரஜன் டை ஆக்சைடு துகள்கள் வெளிவருவதாகவும், இதன் மூலம் வீடுகளில் காற்று மாசு அதிகரித்து இருப்பதாக கண்டறிந்து இருக்கின்றனர். சிலிண்டர் பயன்படுத்தும் வீடுகளில் இரண்டு சதவீதம் காற்று மாசு அதிகமாக காணப்படுவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, காற்றுப்பாதை சேதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
சிலிண்டர் பயன்படுத்தப்படும் நேரங்களில் வீடுகளில் ஆஸ்துமா பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதிகப்படியான சிரமத்தை சந்திக்கின்றனர் என்றும், அதே நேரம் மின்சார குக்கர்களை பயன்படுத்தும் பொழுது காற்று மாசு ஏற்படுவதில்லை என்றும், இது வீட்டிற்குள்ளான உள்புறச் சூழலை பாதுகாக்கிறது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதே நேரம் சிலிண்டர் பயன்படுத்தும் நேரங்களில் அடுப்படியில் இருக்கக்கூடிய ஜன்னல்களை திறந்து வைத்துக்கொண்டு காற்றோட்டத்திற்கு வழி ஏற்படுவதன் மூலம் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசு அளவு குறையும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.