உலக உடல் பருமன் தினம் 2024 மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது. 2020ம் ஆண்டு முதல் மார்ச் 4ம் தேதி உலக உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில், உலகெங்கிலும் உள்ள வளர்ந்து வரும் பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களைச் சேர்ந்த மக்கள், உடல் பருமன் நெருக்கடியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் பருமன் குறித்த தவறான எண்ணங்களைச் சரிசெய்யவும், ஆபத்துக் காரணிகளை எடுத்துச் சொல்லவும், தீர்வுகளைச் செயல்படுத்தவும் கூட்டு நடவடிக்கை எடுக்க ஒன்றுபடுகிறார்கள்.
இந்தியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன் வேகமாக அதிகரித்துள்ளது. 5 முதல் 19 வயது வரை உள்ள சுமார் 1.25 கோடி குழந்தைகள் இயல்பை விட அதிக எடையுடன் இருப்பதாக 2022ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கை 1990ல் 40 லட்சமாக இருந்தது.
உலகளவில், உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது. உடல் பருமன் மற்றும் எடை குறைவாக இருப்பது இரண்டும் ஊட்டச்சத்து குறைபாட்டின் வடிவங்கள் மற்றும் வெவ்வேறு வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.
NCD ரிஸ்க் காரணி ஒத்துழைப்பு (NCD - RisC) என்பது உலகளாவிய விஞ்ஞானிகளின் வலையமைப்பாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2022ல் உலகின் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் 1990ல் இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாகும். 2025ம் ஆண்டளவில் உலகளவில் 270 கோடி பெரியவர்கள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பார்கள் என்கிறது ஆய்வுகள்.
உலக உடல் பருமன் தினம் 2024 தீம்: இந்த ஆண்டு 2024, உலக உடல் பருமன் தினத்தின் கருப்பொருள், ‘உடல் பருமனைப் பற்றி பேசுவோம். பல்வேறு கண்ணோட்டத்தில் உடல் பருமனைக் குறித்து உரையாடல்களைத் தொடங்க மக்களை ஊக்குவிக்க இந்த தீம் வலியுறுத்துகிறது. தகவல் தொடர்பு, சாதனங்கள் மூலம் விவாதங்கள், காணொளிகள் மூலம் மட்டுமே, இளைய தலைமுறையினரிடையே சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் முடியும்’ என்று இந்தத் தீம் ஊக்கம் தருகிறது.
உடல் பருமனின் தீமைகள்: 1975ம் ஆண்டு முதல் உடல் பருமன் விகிதம் பெரியவர்களிடையே மூன்று மடங்காகவும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே கிட்டத்தட்ட ஐந்து மடங்கும் அதிகரித்துள்ளது. இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள அனைத்து சமூக குழுக்களைச் சேர்ந்த அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. டைப் 2 நீரிழிவு, இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் போன்ற பல்வேறு தொற்றாத நோய்களுக்கு (NCDகள்) உடல் பருமன் ஒரு முக்கிய ஆபத்து காரணியாக அமைகிறது.
பெரும்பாலும் உணவு, வாழ்க்கை முறை, மரபணு, உளவியல், சமூக கலாசார, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான கலவையே உடற்பருமனுக்கு வழிவகுக்கின்றன.
தீர்வுகள்: பெற்றோர், அரசு, மருத்துவர் மனம் வைத்தால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவு மற்றும் பானங்களை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை கட்டுப்படுத்துவது அவர்கள் கையில் உள்ளது. தம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதேபோல அரசும் சர்க்கரை பானங்களுக்கு வரி விதிப்பது மற்றும் மலிவு விலையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் வழங்குதல், நகரங்களில், பாதுகாப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பொழுதுபோக்கிற்கான இடத்தை உருவாக்க வேண்டும். மக்கள் ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும், உடல் பருமனுக்கு முறையான சிகிச்சையை மேற்கொள்ளவும், நடைமுறை தீர்வுகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.