இயற்கையோடு இணைந்த இல்லம்: பழைய காலத்துப் புதுமையான வழிகள்!

healthy-home
healthy-home
Published on

“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரய முடியும்” என்பார்கள். அதேபோல், ஒரு வீடு என்பது வெறும் கற்களால் ஆன கட்டிடம் மட்டுமல்ல; அது நாம் சுவாசிக்கும் ஆரோக்கியமான இடமாகவும் இருக்கவேண்டும். நவீன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த சில எளிய பழக்கவழக்கங்கள் மூலம் வீடுகளை நறுமணத்தோடும், அதிக புத்துணர்வோடும் பராமரித்தனர்.

அந்தக் காலத்தில் நவீன ஏர்-கண்டிஷனர்களோ அல்லது ரசாயன வாசனை திரவியங்களோ கிடையாது. ஆனாலும், வீடுகள் எப்போதும் குளிர்ச்சியாகவும், ஒருவித நறுமணத்தோடும் இருந்தன. அதற்கு அவர்கள் பின்பற்றிய சில முக்கிய நடைமுறைகள் இதோ:

இயற்கையான காற்றோட்டம் (Natural Ventilation): பழைய வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் வாசல்கள் நேருக்கு நேராக இருக்கும். அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே ஜன்னல்களைத் திறந்து விடுவார்கள். இது இரவு முழுவதும் தேங்கியிருந்த காற்றை வெளியேற்றி, அதிகாலையின் சுத்தமான ஆக்ஸிஜனை உள்ளே கொண்டு வரும். வீட்டின் ஒரு பக்கம் காற்று நுழைந்து மறுபக்கம் வெளியேறும் வகையில் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும், இது வீட்டை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

கிருமிநாசினியாக இயற்கை பொருட்கள்: இன்று நாம் பயன்படுத்தும் பினாயிலுக்குப் பதிலாக அன்று சுத்தமான இயற்கை பொருட்களைப் பயன்படுத்தினர். தரையைத் துடைக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூள் அல்லது வேப்பிலை கலந்து துடைப்பார்கள். இது கிருமிகளை அழிப்பதோடு, ஒரு மென்மையான நறுமணத்தையும் தரும். வீட்டின் வாசலில் சாணம் தெளிப்பது கிருமி நாசினியாகவும், தூசிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் அரணாகவும் இருந்தது.

நறுமணத்திற்கு சாம்பிராணி மற்றும் பூக்கள்: வாரத்திற்கு இருமுறை அல்லது தினமும் மாலை வேளையில் சாம்பிராணி புகை போடுவார்கள். இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, பூஞ்சை காளான்கள் வளருவதைத் தடுக்கும். மேலும், அதன் மணம் மனதிற்கு அமைதியைத் தரும். வரவேற்பு அறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் மல்லிகை கொடி ரோஸ் அல்லது சாமந்தி போன்ற வாசனை மலர்களைப் போட்டு வைப்பார்கள். இது இயற்கையான ‘ஏர் ஃப்ரெஷனர்’ ஆகச் செயல்படும்.

இதையும் படியுங்கள்:
கைக்கெட்டும் தூரத்தில் ஆரோக்கியம்: பால்கனி தொட்டிகளில் காய்கறி வளர்ப்பது எப்படி?
healthy-home

ஈரப்பதம் மற்றும் வெப்ப மேலாண்மை: தண்ணீர் குடிக்க மண் பானைகளைப் பயன்படுத்தினர். இது அந்த இடத்தைச் சுற்றியுள்ள வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடை காலங்களில் ஜன்னல்களில் வெட்டிவேர் தட்டிகளைத் தொங்கவிட்டு அதில் தண்ணீர் தெளிப்பார்கள். இதன் மூலம் வரும் காற்று மிகவும் குளிர்ச்சியாகவும் வாசமாகவும் இருக்கும்.

துணிகளை வெயிலில் உலர்த்துதல்: படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி நல்ல வெயிலில் காயப்போடுவார்கள். சூரிய ஒளி ஒரு சிறந்த கிருமிநாசினி என்பதால், துணிகளில் இருக்கும் ஒருவிதமான பழைய வாடை (Musty smell) நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

சமையலறை பராமரிப்பு: சமையலறையில் கரும்புகை படியாமல் இருக்க புகைக்கூண்டுகள் (Chimneys) போன்ற அமைப்புகள் (புகை போக்கி) ஓடுகளில் இருக்கும். கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுவதால் வீட்டின் உள்ளே துர்நாற்றம் வீசாது.

இந்த முறைகள் அனைத்தும் செலவில்லாதவை மட்டுமல்லாமல், நம் உடல் ஆரோக்கியத்திற்கும் சுவாசத்திற்கும் மிகவும் உகந்தவை.

நவீன காலத்தில் நாம் ரசாயன கலந்த வாசனை திரவியங்களையும், இயந்திரங்களையும் சார்ந்து வாழ பழகிவிட்டோம். ஆனால், நம் முன்னோர்கள் பின்பற்றிய வேப்பிலை, மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கைக் காற்றோட்டம் போன்ற முறைகள் செலவில்லாதவை மட்டுமல்ல, ஆரோக்கியமானவையும் கூட.

இத்தகைய எளிய வீட்டுப் பழக்கங்களை மீண்டும் நம் வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம், நம் இல்லங்களை என்றும் புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com