

குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் நல்ல சத்துக்கள் அடங்கிய ‘ஒரு பேலன்ஸ் ஆனா உணவுகள்’ என்றைக்கும் இருக்கவேண்டும். பெற்றோர்கள் எப்படி தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று மெனக்கெடுகிறீர்களோ. அதுபோல அவர்களின் லஞ்ச் மெனுவிலும் இந்த அக்கறையை கட்டாயம் ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும்.
இதுதான் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கின்றன. இத்தகைய உணவுகள் பள்ளி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைத்து; ‘ஆப்சென்ட்’ என்ற நிகழ்வே அவர்களின் பள்ளி பருவத்தில் இருக்காது என்று அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன. இந்த லஞ்ச் உணவுப் பட்டியல்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டாலும், அதன் ஆரோக்கியங்கள் சீராகவே இருக்கின்றன.
ஒரு லஞ்ச் பாக்ஸில் அத்தியாவசியமாக இருக்க வேண்டியவை:
இந்தியப் பள்ளி மாணவர்களுக்கு, கட்டாயம் இடம்பெற வேண்டிய பொருட்கள் தானியங்கள் (அரிசி, கோதுமை, சிறுதானியங்கள்), பருப்பு வகைகள் (பயறு, அவரை), காய்கறிகள், பழங்கள் மற்றும் முட்டை, பால் அல்லது பன்னீர் போன்றவைகள். இந்த உணவுகள் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள் போன்ற பேரூட்டச்சத்துக்களுடன்; இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்ற சத்துக்களையும் வழங்குகின்றன.
குழந்தைகள் தினமும் போதுமான ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக, பிரதம மந்திரி போஷன் திட்டம்(PM POSHAN scheme) இந்த வகைகளைப் பரிந்துரைக்கிறது.
இந்த உணவுகள் ஏன் முக்கியமானவை?:
இந்தப் பொருட்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்க உதவுகின்றன. விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வின்படி (2016–2018), இந்திய இளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட 28% பேர் ரத்தசோகையால் பாதிக்கப் பட்டிருந்ததையும், அவர்களில் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்ததையும் வெளிப்படுத்தியது.
ஒரு பேலன்ஸான மதிய உணவு இந்த விஷயங்களைச் சரி செய்ய உதவுகிறது. காலப்போக்கில் உடல் வளர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி ஆகிய இரண்டையும் கட்டிக்காக்கிறது.
லஞ்ச் மெனுவில் உள்ள மாநில வாரியான வேறுபாடுகள்:
அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் உணவு விருப்பங்கள் அல்லது கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, மாநிலங்களுக்கு இடையே உணவுப் பொருட்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் முட்டைகள் வழக்கமாக சேர்க்கப்படுகின்றன, அதேசமயம் சில வடமாநிலங்கள் பால் பொருட்களை அதிகம் சார்ந்துள்ளன.
கர்நாடகாவில் சிறுதானியங்கள் பொதுவானவை. அதேசமயம் மேற்கு வங்கத்தில் அரிசி ஆதிக்கம் செலுத்துகிறது. மாநிலங்களுக்கு இடையே இந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் தேசிய தரநிலைகளுடன் ஒன்றிப்போவதால்; பலன்கள் குறையாமல்தான் கிடைக்கின்றன.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகள்:
அந்தந்த மாநிலங்களின் பள்ளி உணவுத் திட்டங்கள், உலகளவில் குழந்தைகளிடையே எழும் வளர்ச்சி பிரச்னையை 15–29% குறைப்பதாக சான்றுகள் காட்டுகின்றன. இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஆய்வுகள்படி, மதிய உணவைத் தவறாமல் எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற எடையில் பலன் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளன. குழந்தைகள் இதுபோல் நல்ல தரத்தில் உணவளிக்கப்படும்போது, சிறந்த கவனம், ஆப்சென்ட் நிகழ்வு குறைவது ஆய்வுகள் உறுதிபடுத்தின.
மாபெரும் ஆளுமைகளின் வார்த்தைகள்:
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியாவின் மதிய உணவுத் திட்டத்தை பாராட்டி, “ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியா காட்டும் கவனத்திற்காக நான் அதற்கு ‘ஏ’ கிரேடு கொடுப்பேன். இது உண்மையாகவே அர்த்தமுள்ள பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல உதவுகிறது,” என்று கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான்: "குழந்தைகள் மீது உலகம் கொண்டிருக்கும் நம்பிக்கையைவிட புனிதமான நம்பிக்கை வேறெதுவும் இல்லை. அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதையும், அவர்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதைவிட முக்கியமான கடமை வேறெதுவும் இல்லை."
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் தினசரி சத்து தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, அவர்களின் பள்ளி வருகைப் பதிவை (Attendance) அதிகரித்து, படிப்பில் அதிக கவனம் செலுத்தக்கூடிய சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.