

இன்றைய குழந்தைகள் மொபைல், சமூக ஊடகம், திரைப்படங்கள், பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு, கல்விப் போட்டி, குடும்பப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே அப்பாவித்தனத்தை இழந்து Hurried Child Syndrome எனப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் மன அழுத்தம், பயம், படைப்பாற்றல் குறைதல், நடத்தை மாற்றங்கள் உருவாகி, குழந்தைப் பருவத்தின் இயல்பான மகிழ்ச்சி மங்குகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகள் தங்களுக்குரிய சிறு வயது அப்பாவித்தனம் (innocence) இல்லாமல் மிக விரைவாகவே பெரியவர்களைப்போல முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் Hurried Child Syndrome அல்லது Loss of Childhood என்று கூறுவார்கள். இப்படி சிறு வயதுக்கே உரிய அப்பாவித்தனம் இல்லாமல் குழந்தைகள் வளர்வது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய கவலையாகவே மாறி உள்ளது.
இன்றைய குழந்தைகளின் நிலை:
குழந்தைகள் தங்கள் அப்பாவித்தனத்தை இழந்து வருகிறார்கள். இந்த காலத்துக் குழந்தைகளின் குழந்தை பருவத்துடன் நமது குழந்தைப் பருவத்தை ஒப்பிடக்கூடாது என்பது உண்மைதான்.
ஆனால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் மொபைல் ஃபோனுக்குள்ளும், சமூக ஊடகங்களுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது வேதனையும் கவலையும்தான் உண்டாகிறது. குடும்பம் உறுதியற்ற தன்மை, பெற்றோர்களின் பணிச்சுமை,
பொருளாதாரத் தன்மை, கல்விப் போட்டி, திட்டமிடப்பட்ட கால அட்டவணைகள் ஆகியவை குழந்தைகளை எளிதில் முதிர்ச்சி அடையத் தூண்டுகிறது.
இதற்கான முக்கிய காரணங்கள்:
அதிகப்படியான தொழில்நுட்பப் பயன்பாடு:
ஸ்மார்ட்போன் மற்றும் இணையம் மூலம் அவர்களின் வயதிற்கு மீறிய தேவையற்ற தகவல்களை எளிதாக அறிந்து கொள்கிறார்கள்.
திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள்:
வன்முறை, முதிர்ச்சியான நகைச்சுவைகள் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த தொடர்களைப் பார்ப்பது என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனிப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு:
படிப்பிலும், மற்ற திறமைகளிலும் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற பெற்றவர்களின் அதிக எதிர்பார்ப்பு காரணமாக அவர்களிடையே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
விளையாட்டு நேரக் குறைவு:
ஓடிப் பிடித்து விளையாடும் பருவகால விளையாட்டுகள் குறைந்து, எப்போதும் ஏதேனும் ஒரு வகுப்பிற்கு செல்வது அல்லது கணினித் திரையோடு முடங்கிப் போவது அவர்கள் உடல் நலன் மற்றும் மன நலத்தை பெரிதளவில் பாதிக்கிறது.
குடும்பப் பேச்சுகளில் பங்கேற்பு:
பெரியவர்களின் பணப் பிரச்சனைகள் போன்ற குடும்பப் பொருளாதார சுமை, மன அழுத்தங்கள், சண்டைகள் போன்றவற்றை குழந்தைகளின் முன்னிலையிலேயே விவாதிக்கப்படுவது போன்றவை காரணங்களாகும்.
வணிக ரீதியான விளம்பரங்கள் குழந்தைகளைச் சிறு வயதிலேயே நுகர்வோராக மாற்றுகின்றன.
இதனால் ஏற்படும் விளைவுகள்:
மன அழுத்தம்:
சிறு வயதிலேயே பதட்டமும் மனச்சோர்வும் ஏற்படுவதுடன் பெரியவர்களைப் போல கவலைப்படவும் தொடங்குகிறார்கள். பயமும் பதற்றமும் உலகம் பாதுகாப்பற்றது என்ற எண்ணமும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய தொடங்குகிறது.
படைப்பாற்றல் குறைதல்:
குழந்தைகளுக்கே உரிய கள்ளம் கபடமற்ற குணமும், வெள்ளந்தியான மனமும், கற்பனைத் திறனும், இயல்பான குழந்தைத்தனமும் குதூகலமும் மங்கிப் போய் விடுகின்றன..
நடத்தை மாற்றங்கள்: பெரியவர்களைப் போல பேசுவது, வாதிடுவது மற்றும் பிடிவாதம் பிடிப்பது போன்ற நடத்தை மாற்றங்கள் ஏற்படும்.
இதற்கு பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டியது:
மொபைல், டிவியைக் கட்டுப்படுத்தி, வயதுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை மட்டும் அனுமதிக்கலாம். திரை நேரத்தை ஒழுங்குபடுத்தலாம். குழந்தைகள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பது நல்ல பலனைத் தரும்.
வயதுக்கேற்ற கதைகள் மற்றும் புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கலாம்.
தினமும் அவர்களுடன் பேசி, கதை சொல்லி அவர்களின் வயதிற்குரிய உலகத்திற்குள் நாமும் சென்று அவர்களையும் மகிழ்விக்கலாம்.
அவர்களுடைய மதிப்பெண்களை மட்டுமே முக்கியமாகக் கருதி அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தராமல் சுதந்திரமாக சிறிது நேரம் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கலாம்.
குடும்ப நிதி பற்றாக்குறை மற்றும் தனிப்பட்ட பிரச்னைகளை குழந்தைகள் எதிரில், அவர்கள் காதுப்படப் பேசாமல் இருக்கலாம்.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கண்காட்சிகள் குறிப்பாக அறிவியல் கண்காட்சிகள், சுற்றுலா என அழைத்துச் சென்று இயற்கையோடு இணையவும், மற்ற குழந்தைகளோடு பழகவும் விடலாம்.
கல்வி அழுத்தத்தில் சிக்கித்விக்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சுதந்திரத்தை வழங்கி, அவர்களின் தனித்துவமான படைப்பாற்றலை முழுமையாக வெளிக்கொணரச் செய்யும் திறனைப் பெறுவீர்கள்.