ஜோரான மழை... பயங்கர இடி... டிவி பார்க்கலாமா? 

Thunder
Thunder
Updated on

மழை, இடி, மின்னலுடன் கூடிய காலங்களில் நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கைகள், நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இத்தகைய காலங்களில் டிவி பார்க்கலாமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழும் ஒரு பொதுவான கேள்வியாகும். எனவே, இந்தப் பதிவில், மழை இடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மின்னல் Vs. மின்சாரம்:

மின்னல் என்பது வானிலை மாற்றங்களின் போது ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இது வளிமண்டலத்தில் உள்ள மின்னூட்ட துகள்களின் இடையே ஏற்படும் மின்னழுத்த வேறுபாட்டால் உருவாகிறது. இந்த மின்னழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும், மின்னல் தோன்றி மின்னூட்டங்கள் சமநிலை அடைகின்றன.

மின்னல் தாக்கினால், அதிக அளவு மின்சாரம் தரையை நோக்கி பாய்ந்து, அதன் பாதையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தும். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம், மின்னலின் தாக்கத்தால் பாதிக்கப்படலாம். மின் இணைப்புகள், மின்சார உபகரணங்கள் போன்றவை மின்னலால் சேதமடைய வாய்ப்புள்ளது.

மின்னல் தாக்கினால், வீட்டில் உள்ள டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன்ற மின்சார உபகரணங்கள் சேதமடையலாம். சில சமயங்களில் மின்னலால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்னல் நேரடியாக ஒருவரை தாக்கினால் உயிரிழப்பு சம்பவம் கூட ஏற்படலாம். 

மழை இடியின் போது டிவி பார்க்கலாமா?

இந்தக் கேள்விக்கு நேரடியான பதில், “பார்க்கக் கூடாது” என்பதாகும். இத்துடன் இடியின் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். முதலில், வீட்டில் மின் காப்பு சாதனம் (Surge Protector) பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த சாதனம், மின்னலின் தாக்கத்தால் ஏற்படும் மின்னழுத்த உயர்வை கட்டுப்படுத்தி, மின்சார உபகரணங்களைப் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!
Thunder

இடி மின்னல் மிகவும் கடுமையாக இருந்தால், அனைத்து மின்சார உபகரணங்களின் பிளக்கையும் பிடுங்கிவிட்டு, மெயின் சுவிட்சை ஆஃப் செய்துவிடுவது நல்லது. வீட்டில் ஆன்டெனா கம்பி இருந்தால், அதை மின் இணைப்பிலிருந்து துண்டிக்க வேண்டும். மின்னல் தாக்கினால், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறும். எனவே, கண்ணாடி ஜன்னல்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.

மின்னல் என்பது ஒரு இயற்கை நிகழ்வு என்றாலும், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும். மின் காப்பு சாதனம் பயன்படுத்துதல், மின் இணைப்பை துண்டித்தல், கண்ணாடி ஜன்னல்களிலிருந்து விலகி இருத்தல் போன்றவை சில முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள். மேலும், மின்னல் தொடர்பான தவறான கருத்துக்களிலிருந்து விடுபட்டு, சரியான தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com