

இந்தியாவில் அரிசி உணவே அதிகம் உட்கொள்ளப் படுகிறது. நமது பிரதான உணவு அரிசியாகும். தினசரி அனைவரது வீடுகளிலும் சாதம் செய்வது வழக்கமாகவே உள்ளது. அதற்கு அரிசி ஊறவைத்து கழுவி சாதம் செய்யப்படும். அரிசியை கழுவுவது கெட்ட தண்ணீர் என்று அதை நாம் கீழே தான் ஊற்றி வருகிறோம். ஆனால் அதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் இனி கீழே ஊற்றமாட்டீர்கள்.
அரிசியைக் கழுவிய தண்ணீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின்- பி மற்றும் வைட்டமின் இ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி களைந்த தண்ணீர் கொண்டு அலசினால், முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் பளபளப்புக்கும் துணை புரிகின்றது.
அரிசி கழுவிய நீர், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகத்தில் எண்ணெய் பிசுக்கு சருமம் கொண்ட நபர்களுக்கு இது நிச்சயம் உதவும்.
உடல் வெப்பநிலையை சீராக்க நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில், உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். அப்போது அரிசி தண்ணீரை உட்கொள்வது உடலை குளிர்விக்க ஒரு சிறந்த வழியாகும்.
பாகற்காய், சுண்டைக் காய் போன்ற கசப்புச் சுவை கொண்ட காய்கறிகளை அரிசி களைந்த நீரில் சில மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்தால், அவற்றின் கசப்பு சுவை குறைந்து ருசியாக இருக்கும்.
அரிசி நீரில் தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அது தாவரங்களுக்கு இயற்கை உரமாகச் செயல்படுகிறது. அரிசியிலிருந்து கழுவிய தண்ணீரை உங்கள் உட்புற மற்றும் வெளிப்புற தாவரங்களின் மீது ஊற்றவும். சில நாட்களில் உங்கள் தாவரங்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
வறண்ட சருமத்தால் அவதிப்படுபவர்களுக்கு அரிசி நீர் ஒரு தீர்வாகும். அரிசி நீரில் குளிப்பதால் அற்புதங்கள் நிகழும். அரை வாளி தண்ணீரில் அரிசி நீரை கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் குளிக்கவும்.
அரிசி ஒரு ஸ்டார்ச் என்பதால், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் வீக்கத்தை இது இயற்கையாகவே நீக்குகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.
கருணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை அரிசி கழுவிய நீரில் வேகவைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.
தினமும் 3 முறை கழுவி கீழே ஊற்றப்படும் இந்த தண்ணீர் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் கீழே ஊற்றவேண்டும்? அதை தேவையானவைக்கு பயன்படுத்துவது நல்லதாகும்.