இனி வீட்டு வேலைகளை மனைவி மட்டும்தான் செய்யணுமா? சட்டம் சொல்லும் புதிய அதிரடி விதி!

working women
working women
Updated on

​காலம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சமையலறைக்குள்ளும், நான்கு சுவர் களுக்குள்ளும் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று தங்களின் அறிவுத்திறனாலும் உழைப்பாலும் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியுள்ளனர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு போன்ற சட்டப்பூர்வ உரிமைகள், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மாபெரும் உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. இன்று ஐடி நிறுவனங்கள், வங்கிகள், விண்வெளித்துறை என அனைத்துத் துறையிலும்  மற்றும் பொறுப்புகளிலும் ஆண்கள் எட்டாத உயரங்களைப் பெண்களும் எட்டி வருகின்றனர்.

ஆனால், இந்தத் துரிதமான பொருளாதார மாற்றத்திற்கு இணையாக நம் குடும்ப அமைப்புகளின் சிந்தனை முறை மாறியிருக்கிறதா என்றால் அது கேள்விக் குறிதான். "பெண் என்பவள் எவ்வளவுதான் படித்து, எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வீட்டிற்கு வந்தால் அவள் சமையல் செய்யவேண்டும், துணி துவைக்க வேண்டும், குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் அவள்தான் தனியாகச் சுமக்க வேண்டும்" என்ற ஆணாதிக்கச் சிந்தனை இன்னும் பல வீடுகளில் வேரூன்றிப் போயிருக்கிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்து, கணவнуக்கும் குழந்தைகளுக்கும் கட்டி அனுப்பிவிட்டு, தாங்களும் அரக்கப்பரக்க ஓடி அலுவலக வேலைகளையும் கவனித்து, மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து சமையலறைக்குள் நுழையும் கொடூரமான 'இரட்டைச் சுமை' (Double Burden) இன்று பல பெண்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வதைக்கிறது.

மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, இந்தியக் குடும்ப அமைப்பிற்கு ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வுச் சாட்டையாக அமைந்துள்ளது:

"மனைவி என்பவர் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக மட்டுமே வீட்டிற்கு வரும் ஒரு வேலைக்காரர் (Maid) அல்ல. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் வீட்டு வேலைகளைச் செய்யத் தவறினாலோ அல்லது அவளால் சில காரணங்களால் செய்ய முடியாமல் போனாலோ, அதைச் சட்டத்தின்படி கணவனுக்கு இழைக்கப்படும் 'கொடுமை' (Cruelty) என்று எடுத்துக் கொள்ள முடியாது."

இதையும் படியுங்கள்:
ஏன் சிலரால் அடுத்தவர் வெற்றியைத் தாங்க முடிவதில்லை?
working women

கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும்போது, வீட்டு வேலைகளையும், குடும்பப் பொறுப்புகளையும் இருவரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியது சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல, அதுதான் உண்மையான மனிதாபிமானமும் கூட.

துன்பம் என்பதும், உழைப்பு என்பதும் எப்போதும் பெண்களுக்கே உரியது என்ற ஆணாதிக்க நிலைமை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது ஆரோக்கியமான சமுதாயத்தின் அறிகுறியாகும். குடும்பம் என்பது அதிகாரக் கூடம் அல்ல; அது அண்டர்ஸ்டாண்டிங் (Understanding) மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டப்பட வேண்டிய அழகான பந்தம்.

logo
Kalki Online
kalkionline.com