

இன்று வீட்டில் சமைத்த உணவை சூடாக வைத்திருக்க ஹாட் பாக்ஸ், தெர்மல் கேரியர், எலக்ட்ரிக் வார்மர் போன்ற பல சாதனங்கள் இருக்கின்றன. காலை சமைத்த உணவை மதியம் வரை சூடாக வைத்திருக்க முடிகிறது. உணவு பாதுகாப்பு, வசதிகள் இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி சமாளித்தார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறோமா? உண்மையில் அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வாழ்ந்தார்கள். காரணம், அவர்களுடைய வாழ்க்கை முறையே இயற்கையோடு இணைந்திருந்தது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மண் பானையின் மகிமை
நம் முன்னோர்களின் சமையலறையில் முக்கிய இடம் பெற்றது மண் பானை. மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள் வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.
சமைத்த உணவை மண் சட்டியில் மூடி வைத்தால் அது உடனே குளிர்ந்துவிடாது. இன்று அறிவியல் சொல்லும் வெப்பப் பாதுகாப்பு முறையை, அவர்கள் அனுபவ அறிவால் ஏற்கனவே அறிந்திருந்தார்கள்.
துணி ஒரு இயற்கை ஹாட் பாக்ஸ்
அந்தக் காலத்தில் சமைத்த பாத்திரங்களை பருத்தித் துணியால் அல்லது பழைய வேட்டியால் சுற்றி வைத்தார்கள். இதனால் உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறுவது குறைந்தது. இன்று நாம் பயன்படுத்தும் ஹாட் பாக்ஸின் அடிப்படை நோக்கமும் இதுதான். ஆனால் அப்போது அதற்காக தனி கருவி தேவையில்லை. வீட்டில் இருந்த பொருட்களே அதற்குப் பயன்பட்டன.
அடுப்பின் சூடு உதவிய காலம்
விறகு அடுப்பில் சமைத்த பிறகும், அதன் சூடு நீண்ட நேரம் இருக்கும். அதனால் சமைத்த உணவுப் பாத்திரங்களை அடுப்பின் அருகில் வைத்தார்கள். அங்கே இருந்த மிதமான வெப்பம் உணவை ஓரளவு சூடாகவே வைத்திருந்தது. இது மின்சாரம் இல்லாத காலத்தின் எளிய வெப்பப் பாதுகாப்பு முறையாக இருந்தது.
நேரம் பார்த்து சமைத்த குடும்பங்கள்
இன்றுபோல் அனைவரும் வெவ்வேறு நேரத்தில் சாப்பிடும் பழக்கம் அப்போது இல்லை. குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் உணவருந்தினார்கள். அதனால் சாப்பிடும் நேரத்திற்கு ஏற்ப து. உணவை பல மணி நேரம் சேமித்து வைக்கவேண்டிய தேவை அதிகமாக இருக்கவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் சூடாக்கினார்கள்.
உணவு குளிர்ந்துவிட்டால் அதை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்குவது வழக்கமாக இருந்தது. இதற்காக யாரும் சோம்பல் படவில்லை. ஏனெனில் அன்றைய வாழ்க்கையில் பொறுமையும் ஒழுங்கும் அதிகமாக இருந்தன. வசதிகளை விட பழக்கவழக்கங்களே அவர்களுக்கு உதவியாக இருந்தன.
பாட்டியின் சமையலறை நினைவுகள்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்து வீட்டின் சமையலறையை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். காலையில் அடுப்பில் எரியும் விறகின் மணம் கலந்த புகை வீட்டை நிரப்பியிருக்கும். பெரிய மண் சட்டியில் சோறு வடித்து, அருகில் கறி கொதித்துக் கொண்டிருக்கும். உணவு தயாரானதும் பாட்டி சட்டியின் மீது ஒரு தட்டு வைத்து மூடுவார்.
அதன் மேல் சுத்தமான பருத்தித் துணியைப் போர்த்தி கட்டி வைப்பார். மதிய நேரம் சாப்பிட அமரும்போதும் சாப்பாடு இளஞ்சூட்டுடன் இருக்கும். வீட்டிற்கு வயலில் இருந்து வந்த தாத்தாவும், பள்ளியில் இருந்து வந்த குழந்தைகளும் அதையே சுவைத்து மகிழ்வார்கள்.
அப்போது உணவின் சூடு மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் பாசமும் அன்பும் அங்கே இருந்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதால் உணவு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
ஆனால் இன்று வீட்டில் இருப்பதோ இருவரோ மூவரோதான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் தனியாக உணவை சாப்பிடுகின்றனர் இல்லை இல்லை கொறிக்கின்றனர் அவர்களின் உற்ற துணையாக இருக்கும் கைபேசியுடன்.
தொழில்நுட்பம் வளர்ச்சி
இன்று ஒரு பொத்தானை அழுத்தினால் உணவு சூடாகிறது. ஆனால் அன்றைய தலைமுறை கருவிகளைவிட அனுபவத்தை நம்பியது. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த அந்த மக்கள், பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தினர். வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில், முன்னோர்களின் எளிமையான வாழ்க்கை முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. தேவைக்கு ஏற்ற வாழ்க்கை, இயற்கையை மதிக்கும் மனப்பான்மை, குடும்பத்துடன் செலவிடும் நேரம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
நமக்கான பாடம்
அறிவியல் சொல்லும் உண்மை இன்று வெப்பத்தைப் பாதுகாக்கும் கருவிகள் அறிவியலின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடிப்படை யோசனைகள் பலவும் இயற்கை வாழ்க்கையில் இருந்தே வந்தவை. நம் முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தனர். புத்தகங்களில் படிக்காத அறிவியல், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இயல்பாகவே கலந்திருந்தது.
இன்று நவீன கருவிகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. ஆனால் அந்த வசதிகள் இல்லாத காலத்திலும் நம் முன்னோர்கள் அறிவுடனும் அனுபவத்துடனும் வாழ்ந்தார்கள்.
மண் பானை, பருத்தித் துணி, விறகு அடுப்பு, சரியான நேரத்தில் சமையல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் உணவைப் பாதுகாத்தனர். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கை முறையில் ஒரு எளிமையும், ஒரு அழகும் இருந்தது. ஹாட் பாக்ஸ் இல்லாத காலம் என்பது வசதிகள் குறைந்த காலம் அல்ல; மனித அறிவும் இயற்கை அறிவும் இணைந்து வாழ்ந்த காலம் என்பதே உண்மை.
நவீன மின்சாரக் கருவிகளின் பயன்பாட்டைக் குறைத்து, நம் அன்றாட சமையலில் மண் பாத்திரங்கள் மற்றும் பருத்தித் துணிகள் போன்ற எளிய இயற்கை உத்திகளைப் புகுத்துவதன் மூலம், உணவின் ஊட்டச்சத்து மாறாமல் ஆரோக்கியமாகவும், மின்சாரச் செலவில்லாத சூழல் நட்பு வாழ்வியலையும் உங்களால் மீட்டெடுக்க முடியும்.