வரைவதும் வண்ணம் தீட்டுவதும் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

A coloring child
A coloring child
Updated on

சிறு குழந்தைகளின் மனம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் கோடுகள் வரைதல் மற்றும் ஓவியங்களில் வண்ணம் தீட்டுதல் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. இவை  மூளையின் பல்வேறு பகுதிகளை ஈடுபடுத்துகிறது. குழந்தையின் ஒட்டுமொத்த மன வளர்ச்சிக்கு அவசியமான திறன்களை இது மேம்படுத்துகிறது.

சிறந்த கை - கண் ஒருங்கிணைப்பு: கோடுகள் வரைவதற்கும் வண்ணங்கள் தீட்டுவதற்கும் துல்லியமான இயக்கங்கள் தேவை. இது கை - கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. குழந்தைகள் கிரேயான்கள், பென்சில்கள் மற்றும் தூரிகைகளைக் கையாளும்போது தங்கள் விரல்களையும் கைகளையும் கட்டுப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள். வண்ணம் தீட்டும்போதும் கோடுகள் வரையும்போதும் குழந்தைகள் சிறந்த கைத்திறன் மற்றும் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள். இது எழுதுதல் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தும் பணிகளுக்கு முக்கியமானதாகும்.

படைப்பாற்றல்: வரையும் செயல் குழந்தைகளின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்த உதவுகிறது. இது அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கிறது. மேலும், அவர்களுக்கு ஒரு தெளிவான கற்பனையை உருவாக்க உதவுகிறது. வண்ணங்கள் வடிவங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பது அவர்களின் சிந்தனையை விரிவுபடுத்தும்.

அறிவாற்றல் வளர்ச்சி: கோடுகள், வடிவங்கள் மற்றும் பொருள்களை வரைவது போன்றவை இடம் மற்றும் பொருட்களைப் பற்றிய கருத்துக்களை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவுகிறது. இது இடம் சார்ந்த விழிப்புணர்வு, வடிவியல் போன்ற பிற்கால கணிதத் திறன்களுக்கு அடித்தளமாக உள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கவனம் தேவை. மற்றும் இறுதியாக படம் எப்படி இருக்கும் என்பதை திட்டமிடும் திறனும் வளர்கிறது. இது செறிவு, பொறுமை மற்றும் பணி நிறைவு ஆகிவற்றை  மேம்படுத்துகிறது.

ஆக்கப்பூர்வமான உணர்ச்சி வெளிப்பாடு: கோபமாக இருக்கும் குழந்தையும் அழும் குழந்தையும் கூட வரையும்போதும் வண்ணம் தீட்டும்போதும் மகிழ்ச்சியான உணர்வைப் பெறுகிறது. அவர்களின் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுவதோடு சுய ஒழுங்குமுறை திறன்களையும் வளர்க்க உதவுகிறது.

தொடர்புத் திறன்: குழந்தைகள் தங்களுக்கு பிடித்த கோடுகளை வரையும்போதும் தேர்ந்தெடுத்த வண்ணங்களை தீட்டும்போதும் அவர்களது மொழி மற்றும் தொடர்பு திறன்கள் வளர்கிறது. அவர்கள் கதை சொல்லல் மற்றும் விளக்க மொழியை பயன்படுத்துவதையும் பயிற்சி செய்கிறார்கள்.

வரையும் செயல்பாடுகள்: கோடுகளை வரைவது பெரும்பாலும் வடிவங்களை உள்ளடக்கியது. இவை குழந்தைகள் அவர்களின் சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்தவும் புதிய கருத்துக்களை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
புரூனில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
A coloring child

சாதனை உணர்வு: வரையும்போது அல்லது வண்ணம் தீட்டி முடித்ததும் குழந்தைகளுக்கு பெருமை மற்றும் சாதனை உணர்வை தருகிறது. அதனால் அவர்களின் சுயமரியாதையும் அதிகரிக்கிறது. எந்த வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும், ஒரு வரைபடத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியும் அவர்களுக்கு வளர்கிறது. குழந்தைகள் கற்பனை காட்சிகள் மற்றும் யோசனைகளில் ஈடுபடும்போது அவர்கள் தங்கள் அனுபவங்களுக்கு அப்பால் சிந்திக்க கற்றுக் கொள்கிறார்கள். அறிவாற்றல் மற்றும்  நெகிழ்வுத்தன்மை ஊக்குவிக்கப்படுகிறது.

நினைவாற்றல் மேம்பாடு: குழந்தைகள் தங்கள் நினைவகத்தில் இருந்து படங்களை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும்போது அந்த காட்சி தகவலை நினைவுபடுத்தும் திறனை வலுப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களது நினைவாற்றல் மேம்படுகிறது.

கணிதத்திறன்: கோடுகள் வடிவங்கள் ஆகியவற்றை வரையும் போது ஆரம்பகால கணிதத் திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் எண்களை எழுதத் தொடங்கும்போது வரைதல் மூலம் உருவாக்கப்பட்ட சிறந்த திறன்கள், கை கட்டுப்பாடு ஆகியவை சிறந்த கையெழுத்து திறனாக மிளிரும்.

logo
Kalki Online
kalkionline.com