"குக்கர்ல சோறு குழைஞ்சு போகுதா?" - இது தெரிஞ்சா இனி அந்த பிரச்சனையே வராது!

Cooker
Cooker
Published on

சமையலறையில் இல்லத்தரசிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் மிகச் சிறந்த நண்பன் என்றால் அது பிரஷர் குக்கர் தான். மணிக்கணக்கில் அடுப்படியில் நிற்க வேண்டிய வேலையைச் சில நிமிடங்களில் இது முடித்துவிடும். ஆனால், இதில் இருக்கும் ஒரே சிக்கல், சரியான 'விசில்' கணக்கு தெரியாததுதான். 

சில நேரங்களில் சாதம் குழைந்து பாயசம் போல ஆகிவிடும்; அல்லது மட்டன் வேகாமல் ரப்பர் போல இருக்கும். இதனால் வீட்டில் திட்டு வாங்கிய அனுபவம் பலருக்கும் உண்டு. குக்கரில் சமைப்பது ஒரு கலை என்றால், அதற்கு எத்தனை விசில் விட வேண்டும் என்று தெரிந்து கொள்வது ஒரு அறிவியல். இனி உங்கள் சமையல் சொதப்பாமல் இருக்க, எந்த உணவுக்கு எவ்வளவு விசில் தேவை என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.

அரிசியும் பருப்பும்! 

தினசரி நாம் சமைக்கும் அரிசி மற்றும் பருப்பு வகைகளுக்குப் பொதுவான ஒரு கணக்கை வைப்பது தவறு. ஏனெனில், நாம் பயன்படுத்தும் அரிசியின் வகை மற்றும் அதை ஊறவைக்கும் நேரத்தைப் பொறுத்து விசில் அளவு மாறுபடும். உதாரணமாக, நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் புழுங்கல் அரிசியை குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றினால், சரியாக 3 விசில்களில் பூப்போல வெந்துவிடும். 

அதுவே பாசுமதி அல்லது சீரகச் சம்பா போன்ற மென்மையான அரிசி வகைகள் என்றால், 2 விசில்களே போதுமானது. பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, நன்கு ஊறியிருந்தால் 3 விசில் விட்டாலே மசிய வெந்துவிடும்.

தானியங்கள் மற்றும் காய்கறிகள்! சுண்டல், ராஜ்மா போன்ற கடினமான தானியங்களைச் சமைக்கும் முன்பு, நிச்சயம் இரவு முழுவதுமோ அல்லது குறைந்தது 8 மணி நேரமோ ஊறவைக்க வேண்டும். பாசிப்பயறு, மொச்சை போன்ற சற்று மென்மையான பயறுகளுக்கு 4 விசில் போதும். ஆனால், கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ் மற்றும் ராஜ்மா போன்றவை மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், இவற்றுக்கு 5 முதல் 6 விசில் வரை விட்டால் தான் மென்மையாக இருக்கும்.

காய்கறிகளைப் பொறுத்தவரை, குக்கரில் சமைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக நேரம் விட்டால் அவை கூழ் போலாகி, சத்துக்கள் வீணாகிவிடும். எனவே, காய்கறிகளுக்கு ஒரே ஒரு விசில் மட்டுமே போதுமானது.

இதையும் படியுங்கள்:
இட்லி நம் வாழ்வோடு இணைந்த ஒரு அபாரமான உணவு!
Cooker

அசைவ உணவுகள்: அசைவப் பிரியர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை இறைச்சி வேகாமல் போவதுதான். கோழி இறைச்சி இயற்கையிலேயே மென்மையானது என்பதால், அதற்கு 2 விசில் விட்டாலே போதும்; கறியில் மசாலா இறங்கி ருசியாக இருக்கும். ஆனால், ஆட்டுக்கறி விவகாரம் அப்படியல்ல. அது வேக அதிக நேரம் எடுக்கும். இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் 6 விசில் வரை விடலாம். அதுவே சற்று முற்றிய கறி என்றால், பஞ்சு போல வேகக் குறைந்தது 8 முதல் 10 விசில் வரை தேவைப்படும்.

கவனிக்க வேண்டியவை: விசில் கணக்கு மட்டும் சமையலை ருசியாக மாற்றிவிடாது. குக்கரின் அளவு, உள்ளே இருக்கும் பொருட்களின் அளவு மற்றும் அடுப்பின் தீ ஆகியவை மிக முக்கியம். அடுப்பை மிதமான தீயில் வைத்துச் சமைப்பதே சிறந்தது. அதேபோல், குக்கரில் முழுவதுமாகப் பொருட்களை நிரப்பாமல், பாதி அளவு மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே, அடுத்த முறை குக்கரை அடுப்பில் ஏற்றும்போது, இந்தக் கணக்குகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com