பொதுவாகவே, குழந்தை பிறந்த தகவல் தெரிந்த உடனே நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வண்ண வண்ண ஆடைகளை வாங்கி பரிசளிப்பார்கள். குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகள் கிடைக்கும். ஆனால், அவற்றை எல்லாம் போட்டு அழகு பார்ப்பதை விட, குழந்தையின் சருமம் மற்றும் பருவ காலத்தை பொறுத்து உடைகளை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆடை அணிவதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். குழந்தைகளுக்குப் போட்டுவிடும் ஆடைகள் அவர்களின் உடலை உறுத்தாத வகையில் இருப்பது அவசியம். நாம் வசிக்கும் இடத்தின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப சரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்கலாம்.
குழந்தைகளுக்கான குளிர் கால ஆடைகள்:
1. குளிர்காலம் என்றால் குழந்தைகளுக்கு மென்மையான கம்பளியால் தயாரிக்கப்பட்ட உடைகள்தான் சரியான தேர்வு.
2. குழந்தைகளை குளிர் தாக்காதவாறு அவர்கள் உடல் முழுவதும் உடைகள் கவர் செய்யும்படி போட்டு விடவும்.
3. குழந்தைகளின் பாதங்களுக்கு சாக்ஸ், கைகளுக்கு கையுறைகள் தலைக்கு இதமான குல்லா போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
4. இந்தக் காலகட்டத்தில் நிறைய துணிகள் தேவைப்படும். அதனால் உடனுக்குடன் துணிகளை துவைத்து, உலர்த்தி காய வைப்பது அவசியம்.
6. துணிகள் ஈரத்தன்மையுடன் இருந்தால் அதில் பூஞ்சைகள் உருவாகி குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அபாயம் உண்டு என்பதால் மிகவும் கவனமாக கையாளவும்.
குழந்தைகளுக்கான கோடைக்கால ஆடைகள்:
1. கோடைக்காலத்தில் மெல்லிய காட்டன் உடைகள்தான் குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்றது. வியர்வையால் நனைந்தாலும் காட்டன் துணி ஈரப்பதத்தை உறிஞ்சி, குழந்தைக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும்.
2. சிறுநீர் கழிக்கும் துணிகளையும் அவ்வப்போது மாற்றி விடவும் காட்டன் துணிகளை வைத்துக்கொள்ளலாம்.
3. துணிகளை நன்றாகத் துவைத்து இளம் வெயிலில் காய வைத்துப் பயன்படுத்தலாம்.
4. ஜிமிக்கி, மணிகள், கற்கள், ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை எப்போதுமே குழந்தைகளுக்கு போட்டுவிட வேண்டாம். இந்த உடைகள் அவர்களின் சருமத்தை உறுத்துவதோடு சருமத்தில் பல்வேறு சிராய்ப்புகள் ஏற்பட்டு சருமம் பாதிக்கலாம். இந்த சின்ன முத்துக்கள், கற்கள் ஆகியவற்றை தெரியாமல் விழுங்கி விடவும் வாய்ப்புகள் உண்டு.
5. குழந்தைகளின் உடைகள் அதிக எடை இல்லாமல், மேலும் சுத்தமானதாகவும், மென்மையானதாகவும் இருப்பது நல்லது.
பொதுவாகப் பயன்படுத்துதல்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். எனவே, எளிதாகக் கழற்றி மாட்டக்கூடிய ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். உடைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். மிதமான வாஷிங் பவுடரை தேர்ந்தெடுத்து துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தலாம்.
அடர் பச்சை, அடர் நீலம், அடர் சிவப்பு போன்ற நிறம் போகும் துணிகள் வாங்குவதைத் தவிர்க்கலாம். மென்மையான நிறங்கள் கொண்ட உடைகள் குழந்தைகளுக்கு ஏற்றது.
தலை வழியாகப் போடும் ஆடைகளை விட, சட்டைப் போல அணியும் ஆடைகள் சிறந்தது. ஒருவேளை தலை வழியாக போடும் ஆடையாக இருந்தால் பெரிய கழுத்துப் பகுதியாக இருப்பது நல்லது.
பாலியஸ்டர், சில்க் போன்ற துணி வகைகளைத் தவிர்க்கவும். அவ்வப்போது உடைகளை மாற்றிக்கொண்டே இருப்பது நல்லது. ஒரு நாளுக்குக் குறைந்தது 5 முதல் 6 உடைகளையாவது குழந்தைகளுக்கு மாற்ற வேண்டும்.
சேப்டி பின், கொக்கிகள், கழுத்தை இறுக்கும் வகையில் கயிறு, எலாஸ்டிக் போன்றவை இல்லாததாகவும் இருப்பது நல்லது.
கை இல்லாத காட்டன் சட்டைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு எளிதில் போட்டு விடும் வகையில் இருக்கும் என்பதால் அதைத் தேர்ந்தெடுக்கலாம்.
எந்த சீசனாக இருந்தாலும் இறுக்கமான உள்ளாடைகளையோ, உடைகளையோ தவிர்ப்பது நல்லது.