
இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டால் வெளியில் அனல் காற்று வீசுகிறதோ இல்லையோ... வீட்டில் ஒரு வித அனலை நாம் அனுபவிப்போம். அது வேறு எதுவும் இல்லை. நாம் பயன்படுத்தும் தண்ணீர் மூலம்தான். இதைத் தடுக்க வழி இருக்கிறதா? இல்லை கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன ஆகும்.
தண்ணீர் தொட்டி (Water Tanks)
நாம் பயன்படுத்தும் நீர் ஏன் சூடாக வருகிறது? அதற்கு காரணமே நம் வீட்டில் மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிதான். எந்த அளவு அதன் உள்ளே இருக்கும் தண்ணீரின் வெப்பத்தைப் பராமரிக்கிறோமோ, அந்தளவு நன்மையை நம்மால் பெறமுடியும்.
அதற்கு அலுமினியத் தகடு (Aluminum foil) அல்லது வெப்பத் தாள்கள் (Thermal sheets) போன்ற பொருட்களைத் தண்ணீர் தொட்டியின் வெளிப்புறத்தில் பொருத்தி வெப்பமாதலைக் கணிசமாகக் குறைக்கலாம்.
வெயில் சுட்டெரிக்கும் மதிய வேளையில் ஈரமான சணல் சாக்குகளைத் தொட்டியின் மேல் போற்றிவிட்டு வெப்பம் ஊடுருவலைத் தடுக்கலாம்.
அதேபோல, வெள்ளை நிற நீர்த் தொட்டியைப் பயன்படுத்துவது அல்லது வெள்ளை நிறப் பெயிண்ட்டைத் தொட்டியில் உபயோகப்படுத்தினால்கூட வெப்பத்தைத் தடுக்கலாம்.
கூடுதலாக, கூரை தோட்டங்கள் (Rooftop gardens) அல்லது தண்ணீர்த் தொட்டிகளைச் சுற்றி பசுமையான சூழலை (Greenery plant areas) பராமரிப்பது போன்ற விஷயங்கள் தண்ணீர்த் தொட்டி வெப்பமாதலைத் தடுக்கும்.
விருப்பம் இருந்தால் கொஞ்சம் நவீன தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தலாம். சோலார் பேனல்களால் இயங்கும் நீர் குளிரூட்டும் அமைப்புகள் (Solar-powered water-cooling systems) போன்ற புதுமையான விஷயங்களைப் பயன்படுத்தி ஒரு நிலையான தீர்வைப் பெறலாம். இது சூரிய ஒளியை மின்சாரமாய் மாற்றி, அதன் மூலம் தண்ணீர் தொட்டியைக் குளிர வைக்கிறது.
மேலே, குறிப்பிட்ட எந்த யோசனையும் வேண்டாம் என்றால் தண்ணீர் தொட்டியை நிழலான பகுதிகளில் மாற்றி வைக்கலாம் அல்லது நிலத்தடி தண்ணீர் தொட்டிகளாகக்கூட (Underground water tanks) பயன்படுத்திக் கொள்ளலாம்.
கண்டுகொள்ளாமல் விட்டால்?
கோடைக் காலத்தில் தண்ணீர் தொட்டிகளைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வதால் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதிகமாக வெப்பத்திற்கு வெளிப்படும் நீர்த் தொட்டி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பாசிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகிறது. இது இரைப்பை குடல் நோய்கள் (Gastrointestinal illnesses) அல்லது சரும எரிச்சலை ஏற்படுத்தும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், அதிக வெப்பமான நேரங்களில் பிளாஸ்டிக் தொட்டிகளில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்படுவதால் கடுமையான சுகாதார அபாயங்கள் ஏற்படும். இது தண்ணீரின் சுவையை மோசமடையச் செய்து அதைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாகக்கூட மாற்றிவிடும்.
இறுதியாக நீண்ட காலத்திற்கு நீர் தொட்டி நேரடி சூரிய ஒளியில் இருந்தால் அதன் முழு கட்டமைப்பு (உள் மற்றும் வெளிபகுதி) சேதமடையலாம்.
இந்தக் கடும் வெப்ப சூழ்நிலையை வருடத்தில் 4 - 6 மாதங்கள் வரை எதிர்கொள்வோம். 6 மாதங்கள்தானே என்று எடுத்துக்கொள்ளாமல் மேலே, குறிப்பிட்ட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் குடும்ப தேக ஆரோக்கியத்தைப் பாதுகாத்துகொள்ளுங்களேன்!