துரோகம் என்பது கூடவே இருந்து குழி பறிப்பது. நம் முகத்துக்கு நேரே நல்லவர் போல் காட்டிக்கொண்டு நமக்குப் பின்னால் வேறு மாதிரி நடப்பது. முதுகில் குத்துவது என்று பொருள் கொள்ளலாம்.
எந்த ஒரு மிருகத்துக்கும் இல்லாத குணம் மனிதர்களுக்குள் இருப்பது மிகவும் வேதனையானது. ஒருவர் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து விடுவதும் ஆனால், அவர் அதை காப்பாற்றாது நமக்கு துரோகம் இழைத்தால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது.
உறவுகளாலும் நண்பர்களாலும் துரோகம் இழைக்கப்படும்போது அதன் வலி மிகவும் அதிகமாக இருக்கும். சுயநலம் மிகும்போது துரோகம் செய்யத் தோன்றுகிறது. துரோகம் செய்யும் உறவுகளை எப்படி சமாளிப்பது என்று யோசிப்பதை விட அவர்களை விட்டு விலகுவதே நல்லது.
தானும் தனது குடும்பமும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுயநலம் மிக்கவர்களை விட்டு சற்று விலகியே இருப்பது நல்லது. பொறாமை தீயில் பொசுங்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் சற்றுத் தள்ளி இருப்பது, பட்டும் படாமலும் பழகுவது, ஒளிவு மறைவின்றி அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் நல்லது.
நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் முன்பு நன்கு வாழ்ந்து காட்டுவது சிறந்தது. இதற்குக் கடுமையான உழைப்பும், தளராத மனமும், தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம். துரோகம் செய்பவர்களை மன்னிக்கலாம். ஆனால், மறக்கக் கூடாது. அப்போதுதான் திரும்பவும் நாம் அவர்கள் வலையில் சிக்காமல் இருப்போம்.
வதந்திகளில் ஈடுபடாமல் குறிப்பாக, அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் எதிர்மறையாகப் பேசாமல் இருப்பதும் ஒதுங்கி விடுவதும் சிறந்தது. இப்படிப்பட்ட உறவுகளால் நம் மன அமைதியை கெடுத்துக் கொள்ளாமல், மன உளைச்சலுக்கு ஆளாகாமல் அமைதியாகக் கடந்து செல்வது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது.