

உங்கள் வீட்டில் இடம் இருந்து, அங்கு ஒரு மாமரம் இருக்கிறதென்றால் அதை நன்கு பராமரித்து நற்பலன் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
மாம்பழ சீசன் ஆரம்பிக்கும் முன் மாமரத்தை சுற்றிலும் விழுந்து கிடக்கும் இலை தழைகளை ஒன்று விடாமல் அப்புறப்படுத்தி சுத்தப்படுத்துங்கள். அருகில் ஏதாவது கரையான் மற்றும் எறும்புப் புற்று இருந்தால் அதையும் கிளியர் பண்ணி மண்ணெண்ணெய் போன்றதை மைல்டாகத் தெளித்து அவை மீண்டும் அங்கு வராமல் பார்த்துக்கோங்க.
பின் வேர்ப்பகுதியை சுற்றி கொத்திவிட்டு, தண்ணீர் சுலபமாக உள்ளிறங்கும் வகையில் மண்ணை மிருதுவாக்குங்க. பிறகு காய்ந்த சாண உரத்தை புதிய சத்தான மண்ணுடன் கலந்து வேர்ப்பகுதியில் போட்டு வைங்க. அரிசி மற்றும் காய்கறி கழுவிய நீரை அவ்வப்போது ஊற்றி மரத்தை நீரேற்றதுடன் வைங்க. 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்பது அரசு கூறும் அறிவுறுத்தல்.
மரம் என்றாலே நெடிதுயர்ந்து, சூரிய ஒளி தென்படும் பக்கமெல்லாம் கிளை பரப்பி நாலா பக்கமும் வளரக்கூடியது. மாமரக் கிளைகளை வெட்டிவிடாமல் அப்படியே வளரவிடுங்க. உங்க வீட்டுக்கு நிழலும் குளிர்ச்சியும் கிடைப்பதுடன் சுவாசிக்க சுத்தமான ஆக்ஸிஜனும் கிடைக்கும். மரக்கிளையில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் காக்கைகளையும், தேன் கூட்டை சுற்றி மொய்க்கும் தேனீக்களையும், அவ்வப்போது மர நிழலில் வந்தமர்ந்து இளைப்பாறிச் செல்லும் வண்ணப் பறவைகளையும் பார்க்கப் பார்க்க பரவசமாகும்.
மாம்பழ சீசன் வந்ததும் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்கும். பிறகு பிஞ்சுகள் தோன்றி பருக்க ஆரம்பிக்கும். உதிரும் வடுக்களை சேகரித்து ஊறுகாய் போடலாம். மாதா ஊட்டும் சோற்றைவிட மாங்காய் ஊறுகாய் அதிகம் உண்ண வைக்கும் என்பது பழமொழி.
காய்கள் பருத்து பழுக்கும் நிலைக்கு வந்ததும் ருசிப்பதற்கு வரும் முதல் விருந்தாளி அணில்! அது உண்ட பின் மீந்த பகுதி கொட்டையுடன் கீழே விழுந்து காலில் மிதிபடும். அப்போது முற்றி விட்ட காய்களைப் பறித்து, சிறிது வைக்கோலை தரையில் பரத்தி அதன் மீது அடுக்கி மெல்லிய காட்டன் துணியால் மூடிவைத்து விடுங்க. இரண்டு மூன்று தினங்களில் அவை பழுத்துவிடும். சில காய்களை நறுக்கி ஊறுகாய் போட்டு ஃபிரஷ்ஷா உபயோகிக்கலாம்.
மேலும் சில காய்களை மரத்திலிருந்து பறித்ததும், கழுவி ஸ்லைஸ்களாக நறுக்கவும். கொட்டைகளை நீக்கி துண்டுகளை கண்ணாடி கன்டெய்னர்களில் போட்டு இறுக மூடி ஃபிரீசரில் வைக்கவும். அதை வேண்டியபோது எடுத்து சம்பாரில் போடலாம். பச்சடி செய்யலாம். விரும்பியபடி உபயோகிக்கலாம். அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சிறிதும் குறையாமல் அப்படியே இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டுக்கு வெளிப்பக்கம் படரும் கிளைகளிலுள்ள காய்களை சிறுவர்கள் சமயம் பார்த்து கல்லெறிந்து கைப்பற்றிச் செல்லக் கூடும். அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். அக்கம் பக்கத்தாருக்கும் நாலு நாலு காய்களைக் கொடுத்து மகிழ்வுறச் செய்யுங்க. எல்லோரும் அனுபவிக்கத்தானே இயற்கையின் கொடை!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here