
நம்மிடம் இருக்கும் தகவல்கள் மற்றும் பிறரிடம் நாம் பேசும் உரையாடல்களை மற்றவர்களால் ஒட்டு கேட்க முடியுமா? இதுபோன்ற செயல்களை அவர்கள் ஏன் செய்கிறார்கள்? இது எல்லா மக்களுக்கும் பொதுவானதா? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?
இந்தியாவில், குறிப்பிட்ட விஷயங்களுக்காக பலரின் தனிப்பட்ட தகவல் மற்றும் உரையாடல்களை அணுகுவதற்கு அரசாங்கத்திற்கும், அங்கீகரிக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கும் சட்டப்பூர்வ உரிமை உண்டு.
இருந்தாலும், இதற்கென்று ஒரு அளவு இருக்கிறது. எல்லா குடிமக்களும் இதில் கண்காணிக்கப்படுவதில்லை. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் (national security threats), பொது அவசர நிலைகள் அல்லது தீவிர குற்றவியல் விசாரணை (serious criminal investigations) சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களுக்காக இந்த வகையான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியத் தந்திச் சட்டம் (Indian Telegraph Act),1885 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act), 2000, மூலம் மத்திய அல்லது மாநில உள்துறை செயலர் போன்ற மூத்த அதிகாரிகளின் முன் அனுமதியுடன் மட்டுமே இந்தத் தகவல் ஒட்டு கேட்பு கண்காணிக்கப்படுகிறது.
யார் யார்ரெல்லாம் இதில் ஈடுபடுத்தப்படுவர்?
தொலைபேசி:
இந்த வகையான செயல்களை மேற்கொள்வதில் பல நிலைகள் உள்ளன. உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs) மூத்த அதிகாரிகள் இத்தகையச் செயல்களை அங்கீகரிக்கிறார்கள். புலனாய்வு பணியகம் (Intelligence Bureau), அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau) போன்ற அமைப்புகள் தேவைப்பட்டால் இதில் சேர்க்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான தகவல்கள் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு டெலிகாம் மற்றும் இணைய சேவை (Telecom and internet service providers) மூலம்தான் அரசுக்குச் செல்கிறது.
வங்கி விவரங்கள்:
வங்கியில் பரிவர்த்தனை பதிவுகள் (transaction records) மற்றும் கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை வரி ஏய்ப்பு (tax evasion) அல்லது பண மோசடி போன்ற விஷயங்களுக்காக குடிமக்களின் அனைத்து கணக்குகளும் ரிசர்வ் வங்கி (RBI) அல்லது புலனாய்வு அமைப்புகளால் (investigative agencies) அணுகப்படுகின்றன. இதற்கு தேவையான தகவல்களைக் கொடுக்கும் வங்கிகள் பல கடுமையான நெறிமுறைகளை (maintain strict protocols) பின்பற்றித்தான் இதைச் செயல்படுத்துகின்றன.
வேறென்ன வழிகளில் நம் தகவல் எடுக்கப்படுகிறது?
தொலைத்தொடர்பு, வங்கிகளை தாண்டி பொதுவெளியில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக நாட்டின் அனைத்து குடிமக்களின் தகவல்கள் முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் எடுக்கப்படுகிறது.
ஒரு விழிப்புணர்வு
இருப்பினும், என்னதான் சட்டப்பூர்வமாக நம் தரவுகள் கையாளப்பட்டாலும் சில நேரங்களில் அங்கு நடக்கும் தவறுகளாலோ அல்லது நாம் செய்யும் தவறுகளாலோ நம்முடைய தகவல்கள் சம்பந்தப்படாத பலருக்குச் சென்றுவிடுகின்றன. அரசாங்கமும் இதற்கான விழிப்புணர்வுகளைத் தொலைக்காட்சி, சில விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறது. எனவே, சட்டப்பூர்வக் கண்காணிப்பின் நுணுக்கங்களைப் (legal surveillance checking) தெரிந்து கொண்டு டிஜிட்டல் முறையில் அரசால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.