
உங்கள் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் செல்லுங்கள். பாராட்டு, விமர்சனங்கள், பழி இவற்றை காதில் வாங்காமல் நகருங்கள். காதில் வாங்கினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தவற விடுவீர்கள். துவங்கும்போது தூரத்தை பார்க்காமல் இலட்சியத்தைப் பாருங்கள். திரும்பும்போது இலட்சியத்தைப் பார்க்காதீர்கள். கடந்து வந்த வழியைப் பாருங்கள். தழும்புகள் காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக. உயர்ந்த நிலையை அடைந்தாலும், தொடங்கிய இடத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
அன்பு ஒரு அலை, அதை நமக்கு சாதகமாக்கிகொள்ள இனி எங்கு சென்றாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் மனதில் ஒரு நிறைவை ஏற்படுத்த முயற்சிப்போம். ஹோட்டலுக்கு செல்கிறோம். உணவருந்தி விட்டு புறப்படும்போது, பரிமாறியவர்க்கு ஒரு நன்றியை புன்னகையோடு சொல்லுங்கள், Call taxi ல் செல்கிறோம். ஓட்டுனருடன் இணக்கமாக பேச மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்.
மால்களில் பொருள்கள் வாங்கி பில் போடும்போது, அவரிடம் சில நட்பான வார்த்தைகள். இவை எல்லாம் எதற்கு? அவர்கள் நமக்கு செய்யும் சேவைக்கு அங்கீகாரம். நாம் அவர்களை கவனிக்கிறோம், நீங்கள் ரோபோக்கள் அல்ல என்று மனித நேயத்தோடு உணர்த்தும் போதே அவர்கள் முகத்தில் மெல்ல புன்னகை மலரும்.நாம் அவர்களுக்கு இந்த சிறு செயல் மூலம் உணர்த்துகிறோம். இதனால் நமக்கும் மனநிறைவு, அவர்களுக்கும் மன நிறைவு.
உங்களை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதீர்கள். மற்றவர்களை பற்றி பேசும் சபையில் அமராதீர்கள். ஏனென்றால் அங்கிருந்து நீங்கள் விலகிய பின் அடுத்த தலைப்பு நீங்கள் தான். மனதில் பட்டதை சொல்லும்போது சில இடங்களில் பிரச்னை முடிவுக்கு வருகிறது. சில இடங்களில் பிரச்னை ஆரம்பமாகிறது. புயலின் வேகத்தை கணிக்க முடிந்த மனிதனால் ஒரு மனித மனதின் அடுத்த நகர்வுகளை கணிக்க முடிவதில்லை. வார்த்தைகளின் மதிப்பு தெரிந்தவர்களோடு வாதம் செய்யலாம், வார்த்தைகளால் வாதம் செய்பவரோடு மௌனம் காப்பதே நல்லது.
பழகியவரை பாதியில் விடாதீர்கள். விலகியவரை தேடிச்செல்லாதீர்கள். இரண்டுமே உங்கள் மதிப்பை குறைத்து விடும். உங்களுக்கு பிடிக்காதவர்கள் உங்களோடு இருக்கலாம். அவர்களைவெறுக்க முடியாமலும், விலகிச் செல்ல முடியாமலும் போகலாம். இத்தகைய சூழலில் உங்களின் திறமைகளைக் காட்டாதீர்கள். எல்லா நேரங்களிலும் திறமைகள் எடுபடுவதில்லை. மாறாக பொறுமையை காட்டுங்கள்.சூழ்நிலைகள் மாறும். புரிதல் உருவாகும் அதுவே, உங்களுக்கான தீர்வுக்கு வழிவகுக்கும்.
எந்த வயதிலும் நம் பலத்தை தெரிந்து கொள்வதைவிட, பலவீனத்தை தெரிந்து கொள்வது நல்லது. ஆண்டுகள் போகப்போக உடல் பலவீனமாகத்தான் செய்யும். நம் மனதை பலமாக்கிக் கொண்டால் போதும். நமக்கு நாமே ஆறுதல் கூறும் மனதைரியம் இருந்தால் அனைத்தையும் நாம் கடந்து போகலாம். நமக்குண்டான பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வோம் வாழ்க்கையில் வெற்றி அடைவோம்.