
இறைவன் நமக்கான வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுத்து விடுகிறான். வாழ்வியல் ரீதியாக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், சில மனிதர்களோ எதற்காகவும் அந்த நெறிமுறைகளிலிருந்து விலகி ஆதாயத்தை எதிா்நோக்கி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற கோட்பாடுகளை கடைபிடித்து வாழ்கிறாா்கள்.
இது தவறானது. மேலும், நிலையானதும் அல்ல. அதில் முக்கியமான, ஒரு முரண்பாடான செயல் அந்த மூன்றெழுத்து. அதை பலரும் கடைபிடித்து வாழ்கிறாா்கள். அது என்ன மூன்றெழுத்து? கடமை, காதல், களவு, பொறாமை, மடமை இப்படி பல்வேறு வகையான மூன்றெழுத்து விஷயமா? இல்லை கடன்!
தகுதிக்கு மீறிய வாழ்க்கை, அளவுக்கு மீறிய ஆசை, சிக்கனம் மீறிய செயல், வரவைத் தாண்டிய கடன். கடன் வாங்குவது தவறில்லைதான். அதை நம்மால் திருப்பிச் செலுத்தும் அளவிற்கான வருவாய் இருந்தால் வாங்கலாம். அடுத்த மாதம் லோன் வரும், அலுவலகத்தில் இருந்து அரியர் வரலாம், மகளிா் குழுவில் லோன் வரும், என் தம்பி வெளிநாட்டிலிருந்து வருகிறான், பணம் கேட்டால் கொடுப்பான் இதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்பது போலத்தான்.
எதுவாய் இருந்தாலும் நமது கைக்கு வந்தால்தான் அது நம்முடையது. ஆக, எங்கும் எதிலும் அதீத நம்பிக்கை வைத்து அதிக வட்டிக்குக் கடன் வாங்குது மிகப்பொிய முட்டாள்தனம். அதேபோல, வரவுக்கு மீறிய செலவும் அதே ரகம்தான். குறிப்பிட்ட தேதியில் கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல், வட்டி தங்கிப்போய் அந்த வட்டிக்கு வட்டி கட்ட வேறு ஒரு இடத்தில் வட்டிக்கு பணம் வாங்கி… ஏன்இவ்வளவு சங்கடம்?
கடன் ஒரு ஆலகால விஷம். மனிதனை உயிரோடு வைத்து சித்ரவதை செய்யும் கருவி. சமுதாயத்தில் நமது கெளரவத்தை பாழ்படுத்தும் விரோதி என பட்டியலே போடலாம். ‘கடன் பட்டாா் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ராவணன் கடன் வாங்கவில்லை. மாறாக, ஏன் கலங்கினான்? யுத்தத்தில் ஶ்ரீராமபிரான், ராவணனைப் பாா்த்து, ‘இன்று போய் நாளை வா’ என சொல்லுவதாக ஒரு காட்சி வரும். அப்போதுதான் ராவணன் கலங்குவான். ‘ஒரு மானுடன் என்னை இன்று போய் நாளை வா என சொல்லி விட்டானே’ என கலங்குவானாம்.
அவனது மனோநிலையானது அந்தத் தருணத்தில் கடன் வாங்கியவன் எப்படிக் கலங்குவானோ, அதற்கு இணையாக இருந்ததாம். ஆக, வரவுக்கு மேலே செலவும் வேண்டாம், தகுதிக்கு மீறிய கடனும் வேண்டாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பிள்ளைகளுக்கு சொத்து சோ்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை, கடனை சோ்த்து வைக்க வேண்டாமே!