

கூட்டுக் குடும்பம் என்பது உறவுகள் இணைந்து வாழும் ஒரு வாழ்க்கை முறை. ஒரே வீட்டில் பல தலைமுறைகள் சேர்ந்து வாழும்போது அனுபவமும் இளமையும் ஒன்றாக கலக்கின்றன. தாத்தா பாட்டிகள் சொல்லும் கதைகள் பழமொழிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன. அந்த சூழலில் வளரும் பிள்ளைகள் அன்பையும் மரியாதையையும் இயல்பாக கற்றுக் கொள்கிறார்கள்.
இன்றைய கால வாழ்க்கை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை பதவி வசதி என்ற தேடலில் மனிதன் இடம் மாறிக்கொண்டே இருக்கிறான். அதன் விளைவாக தனிக்குடும்பங்கள் அதிகரிக்கின்றன.
இதனால் முதியோர் இல்லங்கள் சமூகத்தில் அதிகமாக தோன்றுகின்றன. அங்கு உணவு மருத்துவம் பாதுகாப்பு போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆனால் மனதிற்கு தேவையான பாசமும் பேசும் நேரமும் குறைவாகவே இருக்கிறது.
முதியோர் இல்லம் சில நேரங்களில் அவசியமாக இருக்கலாம். வெளிநாட்டு வேலை உடல்நிலை சிக்கல் குடும்ப கட்டாயம் போன்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதையே நிரந்தர தீர்வாக மாற்றிவிடக்கூடாது.
வயது முதிரும் போது மனிதன் தேடுவது வசதி அல்ல. ஒரு வார்த்தை ஒரு சிரிப்பு ஒரு அருகாமைதான். கூட்டுக் குடும்பம் பொறுப்பு உணர்வையும் பகிர்வையும் கற்றுத்தருகிறது.
பேரப்பிள்ளைகளின் சத்தம் வீட்டை உயிரோட்டமாக வைத்திருக்கிறது. வசதி வாழ்க்கையை எளிதாக்கலாம். ஆனால் அன்பு இல்லாத வாழ்க்கை வெறுமையாகிவிடும். அன்பும் புரிதலும் நிறைந்த குடும்பமே மனிதநேயத்தின் உண்மையான அடையாளம்.
இன்றைய சமூகத்தில் உறவுகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. பெரியவர்களை மதிப்புடன் நடத்துவது ஒரு பண்பாடு. அந்த பண்பாடு தொடர்ந்தால் குடும்பமும் சமூகமும் வலுப்பெறும்.
அன்பு தேவையான ஓய்வு நேரம் அவர்களின் மேல் காட்டும் ஒரு அன்பான கவனம் ஆகியவை முதியவர்களின் மனநலத்தை பாதுகாக்கின்றன. அவர்கள் வீட்டில் இருப்பது பிள்ளைகளுக்கும் நல்ல முன்மாதிரியாக அமைகிறது.
இதனால் தலைமுறைகளுக்கு இடையிலான புரிதல் இயல்பாக வளர்கிறது. இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்கையையும் மனிதநேயத்தையும் அளிக்கிறது.
எனவே கூட்டுக் குடும்ப மதிப்புகள் மீண்டும் உயிர்ப்புடன் நிலைபெற வேண்டும். அதுவே முதியோரின் வாழ்வை முழுமையாக அர்த்தமுள்ளதாக்கும் வழி.