

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!
இந்த பழமொழியை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். இந்த வசனம் எந்தெந்த வயதில் எப்படி பொருந்தும் என்று பார்க்கலாமா..?
சரி, முதலில் இதற்கான பொதுவான விளக்கத்தை பார்ப்போம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்றால் என்ன?
இந்த பழமொழிக்கான பொதுவான கருத்து என்று பார்த்தால் வயல்வெளியில் நெற்கதிரை காற்று இருக்கும்போது அடித்தால்தான் அதை பிரிக்க முடியும் இல்லை என்றால் நெற்கதிரை நெல் தனியாக கதிர் தனியாக பிரிப்பது கடினம்.
தூற்றிக்கொள் என்றால் தூசுகளை உதறி பிரித்துக்கொள் என்று பொருள். ஆகவே, காற்று இருந்தால் மட்டும்தான் அந்த நெல்லை பிரிக்க முடியும் இல்லையென்றால் முடியாது.
மாணவப் பருவத்தை வெல்ல உதவும் சிறந்த வாழ்வியல் தத்துவங்கள்
மாணவ செல்வங்களே, உங்களை பொறுத்தவரையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதே அதை உபயோகப் படுத்திக்கொண்டு படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி மேலேறி செல்ல வேண்டும். படிக்கும் வயதில் அதை செய்யாமல் வேறு எதாவது தீயசெயல்களில் மனதை செலுத்தி நழுவவிட்டால் மீண்டும் அது கிடைக்காது. காலம் கடந்த பிறகு நீங்களே நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாது. ஆகவே, மாணவச் செல்வங்களே உங்களுடைய நேரத்தை சரியான வழியில் உபயோகிப்பது மிகவும் அவசியம்.
இளைஞர்கள் சாதிக்க வழிகாட்டும் முக்கிய வாழ்வியல் தத்துவங்கள்
நீங்கள் படித்த முடித்த பின்பு உங்களுடைய இளமைக் காலம் முடிவதற்குள் பணத்தை சேமித்து வைக்க வேண்டும். 'எனக்கு இந்த வேலைதான் வேண்டும்? இந்த இடத்தில் கிடைத்தால்தான் செய்வேன்' என்றெல்லாம் திட்டம் போட்டு வைத்துகொண்டு உடகார்ந்திருந்தால் உங்களுடைய வயது உங்களுக்காக நிற்காது. அது ஓடிக்கொண்டே இருக்கும்.
வயதாகி நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும் பட்சத்தில் உங்களுடைய உடல்நிலை ஒத்துழைக்காது. ஆகவே, முதலில் கிடைத்த வேலையை செய்து கொண்டே மேற்கொண்டு வேறு வேலையை தேட முயற்சி செய்யுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக முடிந்த தொகையை சேமித்து வைக்க பழகிக்கொள்ளுங்கள். கைகளில் காசிருக்கும் போதே சேமித்தால்தான் எதிர்காலத்தில் ஏற்படும் அவசர தேவையை சமாளிக்க முடியும். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தக்க வயதில் திருமணமும் செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு வயதிற்கு மேல் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வயது வித்தியாசத்தின் காரணமாக துணை கிடைப்பதில் பிரச்னை ஏற்படும். ஆகவே நேரத்தை வீண் செய்யாமல் சம்பாதித்து, சேமித்து வைத்து, இளமை காலத்திலேயே திருமணமும் செய்து கொள்ள வேண்டும்.
நடுத்தர வயதினரின் நிம்மதியான வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் தத்துவங்கள்
நடுத்தர வயதில் உள்ளவர்கள் மூச்சிருக்கும்போதே நல்ல செயலை செய்யவேண்டும். எல்லோரிடமும் நல்லவராக நடந்துகொள்ள வேண்டும். மூச்சு இருக்கும்போது நான்கு பேருக்கு நாம் நல்லவிதமாக நடந்து கொள்ளாவிட்டால் நம்முடைய மூச்சு நின்ற பிறகு நம்மை தோளில் சுமக்க கூட அந்த நான்கு பேர் வரமாட்டார்கள். இந்த மூச்சிருக்கும் வரை நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அந்த விதத்தில் நாம் இறந்த பிறகும் நம்மை பற்றி பேசுவார்கள். ஆகவே மூச்சிருக்கும்போதே நல்லவர்களாக இருங்கள். மூச்சு நின்ற பிறகு உங்களால் ஒன்றும் செய்ய இயலாது.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் வாசகர்கள் தங்களின் தற்போதைய வயதிற்கு ஏற்ப நேரத்தையும் வாய்ப்புகளையும் எவ்வாறு சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வார்கள். இது வீணாகும் காலத்தைத் தடுத்து, எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிம்மதியான வாழ்வை அமைப்பதற்கான தெளிவான பாதையைக் காட்டும்.