

குழந்தைகள் இருக்கும் வீட்டில் காலை எழுந்ததும் அவர்களை எழுப்பிவிட்டு காலை கடனை முடிக்கச் சொல்லி, பல் துலக்கச் சொல்வர் அல்லது துலக்கிவிடுவர். அதன் பிறகு குளிக்கச் சொல்லி அல்லது குளிக்க வைத்து யூனிபார்ம் போட்டு காலை டிபனை பெற்றோர்கள் ஊட்டி விடுவார்கள். அதற்குள்ளாக ஆட்டோ, வேன் அல்லது பைக்கில் புத்தகப் பை, லஞ்ச் பேக் வைத்து குழந்தைகளை ஏற்றிவிடுவார்கள்.
எல்லாம் சரியாக செய்துவிட்டோமா என குழந்தையைப் பார்க்கும்போது, "ஐயோ! ஐடி கார்டு மறந்துவிட்டேனே!" என்று அம்மாவோ, அப்பாவோ வீட்டிற்குள் சென்று எடுத்து வந்து குழந்தையின் கழுத்தில் மாட்டிவிடுவார்கள். இவை அத்தனை செயல்களும் நடக்கும்போது பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சம் இருக்காது.
ஆனால் நாம் அவசர அவசரமாக குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் ஐடி கார்டு கயிற்றில் மிகப்பெரிய ஆபத்து ஒளிந்து இருப்பதாக பிரபல குழந்தை மருத்துவர் வீடியோ வெளியிட்டுள்ளார். பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அந்த வீடியோவில் உள்ளவற்றை தற்போது காண்போம்.
வெளிநாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஐடி கார்டு கயிற்றுக்கும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஐடி கார்டு கயிற்றுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு வித்தியாசம் உள்ளது.
எதிர்பாராத விதமாக குழந்தைகள் விளையாடும்போது அல்லது ஐடி கார்டு கயிறு எதிலாவது மாட்டிக்கொண்டாலோ குழந்தையின் கழுத்தைப் பிடித்து இழுக்கும். தமிழ்நாடு அல்லது இந்தியாவில் பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஐடி கார்டு கயிறு குழந்தையின் கழுத்தை நெரித்து உயிர் போகும் அபாயம் உள்ளது.
ஆனால் வெளிநாடுகளில் தயாரித்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஐடி கார்டு கயிற்றை பலமாக யாராவது பிடித்து இழுத்தால் லாக் பகுதியில் 'ஸ்டாப்' ஆகி கழுத்தை நெரிக்காமல் இரண்டு பாகங்களாக தனியாக பிரிந்து விழுந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆகவே பள்ளி குழந்தைகளின் உயிரை காக்கும் விஷயமாக இது இருப்பதால் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் ஐடி கார்டு கயிறை போல ஆபத்து இல்லாத பாதுகாப்பான கார்டுகளை பயன்படுத்த பள்ளிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட மருத்துவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளின் அடையாள அட்டை எனப்படும் ஐடி கார்டில் குழந்தைகளின் பெயர், முகவரி, இரத்த பிரிவு, அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், புகைப்படம் மற்றும் பள்ளியின் முகவரி தொலைபேசி எண், குழந்தை படிக்கும் வகுப்பு போன்ற அனைத்தும் அச்சிடப்பட்டிருக்கும்.
குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று திரும்பி வரும் வரையில் குழந்தையைப் பற்றி யாராவது தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் ஐடி கார்டை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தும் ஐடி கார்டு கயிறுகளை பள்ளி நிர்வாகம் வெளிநாட்டில் இருப்பது போல பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்ற மருத்துவரின் உருக்கமான வீடியோவை பார்த்த பெற்றோர்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. அரசாங்கம் பள்ளி நிர்வாகங்களுக்கு பாதுகாப்பான கார்டு வழங்க உத்தரவிட வேண்டும் என்பதை விரைவிலேயே பரிசீலித்து அறிவிப்பு விட வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குழந்தைகளின் அன்றாட பள்ளிப் பொருட்களின் பாதுகாப்பு தரத்தை புரிந்துகொள்வதன் மூலம், ஒரு பெற்றோராக நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, உங்கள் குழந்தையின் பாதுகாப்பை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும்.